பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

83


என்றுதானே பாடுகின்றான். சரபங்கன் பரத்துவாசன் முதலியவர்கள் அனுபவம் எல்லாம் இப்படித்தானே இருக்கிறது. இப்படியே விபீஷணன், ஏன்? வாலி, ராம நாமத்தையே மந்திரமாக மதிக்கிறான்.

இந்த அவதார ரகசியத்தை எல்லோரையும் விட மிகவும் நன்றாக அறிந்திருந்தவன் கம்பனே. ராம காதையில், தன்னுடைய கருத்துகளை எல்லாம் வெளியிட ஒரு நல்ல பாத்திரத்தையே தேடி வைத்துக் கொள்கிறான். அந்தப் பாத்திரமே அனுமன். அவன் வாயிலாக முடிந்த முடிபாக, கம்பன் சொல்வதையே கேட்கலாம்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர்
   மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த
   காரணன் கைவில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும்
   கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும், மலரும், வெள்ளிப்
   பொறுப்பும் விட்டு அயோத்திவந்தான்

என்று சொன்னதோடு திருப்தி அடையாமல்,

அறம்தனை நிறுத்தி, வேதம்
   அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம்தெரிந்து, உலகம் பூணச்
   செந்நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உகநூறி, தக்கோர்
   இடர்துடைத்து ஏக, ஈண்டு
பிறந்தனன், தன் பொற்பாதம்
   ஏத்துவார் பிறப்பு அறுப்பான்

என்று முடிக்கிறான்.

ராமாவதாரம் என்னும் கம்பனது காவியமே நல்ல சரணாகதி சாஸ்திரம் தானே. அதைத் தானே அனுமன் மூலமாகக் கூறுகிறான் கம்பன்.