பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

273



“அதுவே அறம்; ஆண்மையும், மேன்மையும் ஆகும்” என்றான்.

இராமன் தெளிவான உரைக்கு எதிர் சொல்ல முடியாமல் போய்விட்டது; அதனை ஆணையாக ஏற்றுச் செயல்பட்டனர். சுக்கீரீவன், தானே வீடணனைச் சார்ந்தான்; அவனை வாழவைக்க வரவேற்று அழைத்துச் சென்றான்.

இராமன் அவனை ஏற்றுக்கொண்டான்; “இலங்கைச் செல்வம் உனது; நீண்ட காலம் சிறப்புற ஆண்டு நிலைத்து வாழ்க” என்று வரமும், வாழ்த்தும் கூறினான். ஆட்சி கிடைத்ததற்கு வீடணன், அகம் மகிழ்ந்தான்; மாட்சிமை நிரம்பிய இராமன் திருவடி களில் விழுந்து தொழுது அவன் நல்லாசிகளைப் பெற்றான்.

“தசரதன் மக்கள் நால்வர் நாங்கள்; குகனோடும் சேர்ந்து ஐவரானோம்; சுக்கிரீவனோடு அறுவர் ஆனோம்; இப்பொழுது உன்னோடு சேர்ந்து எழுவராகிறோம்” என்று தன் உடன் பிறப்பாக அவனை இராமன் ஏற்றுக் கொண்டான்.

தமையனை விட்டுப் பிரிந்தவனுக்குத் தங்க மடம் கிடைத்தது; மாற்றுத் தமையன் கிடைத்தான்; தோட்டத்துச் செடிகளைப் பிடுங்கி வேறு இடத்தில் நட்டால் சில செடிகள் பிழைத்துக் கொள்ளும்; கொடியாய் இருந்தால் அதுவும் கொழுகொம்பு தேடிப் படரும்; இதுவும் ஒரு மாற்றுச் சிகிச்சையாய் அமைந்தது அவனுக்கு; உறவை முறித்துக் கொண்ட அவனுக்குப் புது உறவு கிட்டியது; இழப்பு ஈடு செய்யப்பட்டது.