பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

275



உரைகளால் அறிந்தான்; இலங்கையைப் பற்றி அறிய அவன் எழுதாத வரைபடமாக விளங்கினான்.

வானரப் படைகளும் அங்கதன் முதலிய படைத்தலைவர்களும் அனுமனிடம் அளவிலா மதிப்பும் கணிப்பும் வைத்திருந்தனர்; அவன் ஆற்றலிலும் செயல் திறனிலும் முழுநம்பிக்கை கொண்டிருந்தனர்; “கடலைக் கடப்பதற்கு அவன் தான் தக்க விடை சொல்ல வேண்டும்” என்று எதிர் பார்த்தனர்.

“கடலைக் கடப்பது எப்படி? வழிவகைகள் யாவை?” இவை பற்றிச் சீதை மணாளன் சிந்தித்தான்; முல்லை நிலத்துக்குக் கண்ணனும், மலைக்கு முருகனும், மருதத்துக்கு இந்திரனும், பாலைக்குக் காளியும் வழிபடு தெய்வங்களாய் இருப்பது போல, நெய்தல் நிலத்துக்கும், நீலக் கடலுக்கும் தெய்வம் வருணன் என்பது நினைவுக்கு வந்தது. அவன் பெயரால் மந்திரம் சொல்லிச் சென்று ‘கடலில் வழிதருக’ என்று விளம்பினான்; அலை ஒசையில் அவன் காதில் இராமன் சொல்லோசை விழவில்லை.

வாய்ச் சொல்லுக்குச் செவிசாய்க்காத செவிடலை! வழிக்குக் கொண்டு வரக் கைவில்லுக்கு ஆணை பிறப்பித்தான்; இராமன் நாண் ஏற்றினான்; பிரம்ம அத்திர நேத்திரத்தைத் திறந்தான்; ஏவியகணை அவன் ஆவியை வாங்க அவனை அணைந்தது. அலறி அடித்துக் கொண்டு அடக்க ஒடுக்கமாய் அண்ணல் இராமன்முன் வந்து நின்றான் வருணன். அலை அடலுக்கு அப்பால் தன் ஆணையைச் செலுத்தியதால், இப்பால் என்ன நடக்கிறது? என்பதை அவனால் கவனிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தான்; தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.