பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

கம்பராமாயணம்



கடல்நீரை அம்புகொண்டு வற்றச் செய்து விட்டால், காடுகள் இல்லாமல் போய்விடும்; மழை தன் இருப்பைச் சேர்த்து வைத்திருக்கும் வங்கிதான் கடல், வங்கி பொய்த்து விட்டால், மேகங்கள் முடமாகிவிடும்; வான்மழை பொய்த்தால் தருமம் ஏது? நீரில் வாழ் உயிர் அழியும்; நிலத்தில் பயிர் ஒழியும்; “நீரின்று அமையாது உலக வாழ்க்கை” என்ற பழந்தமிழ்ப் பாட்டைச் சொல்லி இராமன் விட்ட அம்பை அடக்கிக் கொள்ள வேண்டினான் வருணன்.

“கடல் பிழைத்தது; அதன்மேல் அணை அமைத்தால்தான் பாதையை அமைக்க முடியும்” என்றான்.

“இரகுராமனாய் விளங்கும் அவன், சேதுராமனாய் மாற வேண்டும்” என்றான்; ‘சிங்களத் தீவுக்கும் இந்தியத் துணைக் கண்டத்துக்கும் சேது அமைப்பது உறுதியாகியது. மற்றும் குரங்குகளைக் கொண்டே “கல்லையும், செடிகளையும், பட்ட மரங்களையும், பாழ்பட்ட முள்களையும் போட்டுப் பாதை அமைக்கலாம்” என்றும் கூறினான்.

குரங்குப்படை அதற்குப் பிறகு உறங்கவே இல்லை; அவை கொண்டுவந்து குவித்த கற்குப்பைகளையும், மரம் செடி கொடி வகைகளையும் நளன் என்னும் தெய்வத் தச்சன், களன் இறங்கி வலிவு மிக்க பாலம் ஒன்று கட்டுவித்தான்; சேதுவின் செய்வினை அவன் கைவினையாய் அமைந்தது. ‘அகலத்தில் பத்து யோசனை நீளத்தில் நூறு யோசனை தூரம்’ என்று அதற்குக் கல்நாட்டு விழாவில் சொல்நாட்டி வைத்தனர்; கட்டி முடிந்தது; இராமன் வந்து பார்வை இட்டான்.