பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கம்பராமாயணம்



அரசன் செயல் இழந்தான்; உணர்வு ஒழிந்தான்; கீழே சவம் எனக் கிடந்தான்; காரியம் முடிந்தது; காரிகை மனநிறைவோடு அந்த இரவு கவலையின்றி உறங்கினாள்.

விழாக் கோலம்

அடுத்த நாள் திருவிழா; முடிசூட்டும் நாள். இராமனுக்காக அவ்விழா காத்துக் கிடந்தது; எங்கும் பரபரப்பு; சுருசுருப்பு: மக்கள் தேனி போல விழாவுக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். அலங்காரங்கள் எங்கும் அழகு செய்தன.

மங்கலப் பொருள்கள் வந்து குவிந்தன. வேதபாரகர் மறைகளைச் சொல்லினர்; அவர்கள் வசிட்டரை வணங்கினர்.

கங்கை முதல் குமரிவரை உள்ள புண்ணிய நதிகளில் இருந்து குடங்களில் நீர் கொண்டு வந்து சேர்த்தனர்; அவையில் அமைச்சர்களும் பிரமுகர்களும் வந்து சேர்ந்தனர்; வசிட்டரும் வந்து அமர்ந்தார்; மன்னன் தசரதன் வந்து சேரவில்லை; அனைவரும் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

வசிட்டர் தசரதனை அழைத்து வரும்படி சுமந்திரனை அனுப்பிவைத்தார். அரண்மனையில் அவனைக் காணவில்லை; சேடியர் கூற அரசன் கைகேயின் அந்தப்புரத்தில் இருப்பதை அறிந்தான்; நேரே அங்குச் சென்றான்; சேடியர்பால் செய்தி அனுப்பி, அவையோர் மன்னனை எதிர்ப்பார்ப்பதாகக் கூறினான். மன்னன் அவனைச் சந்திக்கவில்லை; மன்னிதான் அவனுக்குச் செய்தி தந்தாள்.