பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

கம்பராமாயணம்



மூவரும் சித்திர கூடம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் பரத்துவாசர் ஆசிரமம் காணப் பட்டது. முனிவர் அவர்களைச் சந்தித்தார்; இராமன் துன்பக் கதையைக் கேட்டு, அன்பு மொழி பேசி ஆதரவு காட்டினார்.

“இந்த ஆசிரமத்திலேயே தங்கி, நீங்கள் அமைதியாகத் தவம் செய்துகொண்டு இருக்கலாம்; இங்கு நீரும், மலரும், காயும், கனியும் நிரம்ப உள்ளன; இது தவம் செய்யத் தக்க சூழ்நிலை உடையது. நதிகள் மூன்றும் சங்கமிக்கும் இடம் இது; அவை கங்கை, யமுனை, சரசுவதி எனும் மூன்று நதிகளின் சங்கமம்” என்றார் முனிவர்.

“இது தவம் செய்யத்தக்க இடம்தான் என்றாலும், எம் நாடாகிய கோசலை நாட்டுக்கு ஒரு யோசனை தூரத்திலேயே இது உள்ளது. இங்கு இருப்பது அறிந்து மக்கள் தொக்கு வந்து தொல்லை தருவர்; அதனால், சேய்மையில் உள்ள சித்திரகூட மலைச் சாரலே தக்கது ஆகும்” என்று கூறி, அவர் கூற்றை மறுத்தான் இராமன்.

பரத்துவாசரிடை விடை பெற்று யமுனைக் கரையை அடைந்தனர்; அதனைக் கடத்தித் தர ஒரு குகன் அங்கே இல்லை; படகும் இல்லை; என் செய்வது? இலக்குவன் அங்கிருந்த மூங்கிற் கழிகளைக் கயிற்றால் பிணைத்துத் தெப்பம் அமைந்தான்; அவர்களை அமரச் செய்தான்; துடுப்புகள் தேவைப்படவில்லை. அவன் கைகளே துடுப்புகள் ஆயின, நீரைத் துடுப்புப் போலத் தள்ளி யமுனையைக் கடந்து அடுத்த கரை வந்து சேர்ந்தான்.