பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

கம்பராமாயணம்



“ஆழம் மிக்க இவ் ஆற்றை இவர்கள் எப்படி என் உதவி இல்லாமல் கடக்க முடியும்? யானைப்படை கொண்டு வந்தால் அதைக் கண்டு நடுங்கிப்போக நான் ஒரு சிற்றெலியா? “தோழமை” என்று அவர் சொல்லிய சொல் ஒன்றேபோதும்; அவர்களை எதிர்த்து உயிர்விட்டால் அதுவே எனக்குப் பெருமை; “இந்தக் கோழை வேடன் எதிர்த்து இறக்கவில்லை” என்ற பழியை நான் ஏற்க மாட்டேன்.”

“பரதனது சேனையைச் சாடி அழித்து இராமனே ஆளும்படி வேடுவர் ஆட்சியை மீட்டுத் தந்தனர்” என்ற புகழுக்கு உரிமை உடையவன் ஆவேன்; நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர்கள், நாம் ஆளும் காடும் கொடுக்க மறுக்கிறார்களே! படை எடுத்து அழிக்க வருகிறார்களே!” என்று வீரர்களிடம் உரை நிகழ்த்தினான்.

இராமனுக்கு அன்பனாகிய குகன், இவ்வாறு பேசி நிற்பதைக் கண்ட பரதன், “இவன் யார்? என்று சுமந்திரனைக் கேட்டான். சுமந்திரன் அவனை அறிமுகப் படுத்தினான்.

“கங்கையின் இருகரையும் இவன் ஆட்சிக்கு உட் பட்டவை; அளவற்ற மரக்கலங்களுக்கு உரியவன்; இராமனுக்கு உயிர்த் துணைவன்; களிறு போன்ற திண்மையும், பெருமையும் உடையவன்; கடல் போன்ற படைகளை உடையவன்; “குகன்” என்பது அவன் பெயர்; உன்னைக் கண்டு வரவேற்க நிற்கின்றான்” என்று கூறினான்.