பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

கம்பராமாயணம்



சேய்மையிலேயே பரதன் சேனையோடு வருவதை இலக்குவன் கண்டான்; அவன்மீது ஆத்திரம் கொண்டான்; குகனைப் போலவே அவனும், பரதன் படை கொண்டு தாக்க வந்திருக்கிறான், என்று தவறாய் நினைத்தான்.

அவனை ஆற்றுவது இராமனுக்கு அரும்பாடு ஆயிற்று.

“நம் குலத்து உதித்தவர் இதுவரை தவறே செய்ததில்லை. அறம் நெகிழ்ந்தது இல்லை. பரதன் நீதி நெறியினின்று நிலை குலையான். அவன் இங்கு வருவது ஆட்சியைத் தரவே தவிர மாட்சிமை நீங்கிப் போரைத் தொடுக்க அல்ல” என்று விளக்கினான்.

படையை நிறுத்திவிட்டுப் பரதனும் தன் தம்பி சத்துருக்கனனோடு முந்திச் சென்றான்.

இறந்த தந்தையை எதிர் கண்டதுபோலப் பரதன் இராமனைச் சந்தித்தான்.

“அறத்தை நினைத்தாய் இல்லை; அருளையும் நீத்தாய்; முறைமையைத் துறந்தாய்” என்று கூறி இராமன் அடிகளில் விழுந்து வணங்கினான்.

அறத்தைத் தழுவியதுபோல இராமன் பரதனைத் தழுவினான்; அவன் புனைந்த வேடத்தைப் பன் முறை நோக்கினான்.

“துயருற்ற நிலையில் அயர்ச்சி கொண்டுள்ளாய்; தந்தை வலியனோ?” என்று கேட்டான்.