பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலகாண்டம்

15



சேற்று நிலத்தில் எருமைகள் பாலைச் சொரிந்ததால் நாற்று நடும் வயல்கள் வளம் காட்டின. நெற்பயிர்கள் செழித்தன.

அரங்குகளில் அரிவையர், ஆடலும் பாடலும் நிகழ்த்தினர். யாழும் குழலும் இணைந்து இசை அரங்குகளில் இனிமை கூட்டின. சதங்கை ஒலிகள், பதங்களுடன் சேர்ந்து, நாட்டிய நங்கையருக்கு நளினம் சேர்த்தன. இசையும் நாட்டியமும் வசையில் கலைச் செல்வங்களாய்க் கவின் செய்தன. காவியக் கதைகளில் தேர்ச்சி மிக்கவர் சொரியும் கவி அமுதம் செவிநுகர் கனிகள் ஆயின.

நகர் வளம்

இந்நாட்டின் தலைநகர் அயோத்தி என்னும் மாநகர் ஆகும். செல்வச் சிறப்பால் அளகை நகரையும், இன்பச் சிறப்பால் பொன்னகராம் அமராவதியையும் இது ஒத்து இருந்தது. எழில்மிக்க இந் நகரைப் பொழில் சூழ்ந்த மதில்களும், குழிகள்மிக்க அகழிகளும் சூழ்ந்திருந்தன. மதில்கள் விண்ணைத் தொட்டன. அகழிகள் மண்ணின் அடித்தலத்தை அழுத்தின.

காவல்மிக்க இக் கடிநகரை நால்வகைப் படைகள் காத்துப் போற்றின. மக்கள் தம் உயிர் என மன்னனை மதித்தனர். அவனும் மக்களைக் கண்களை இமை காப்பது போல் காத்துவந்தான். ஏழையின் கந்தல், உழைப்பாளியின் ஒரே நிலம் அவர்களின் உடைமைகள்; அவற்றைப் போல அரசன் நாட்டைக் காத்தது, அவன் கடமை ஆயிற்று. பகைவர் காட்டிய பகை, அவன் முன் எரிமுன் வைத்த பஞ்சு ஆகியது. அவர்கள் அஞ்சிப் புறமுது