பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

கம்பராமாயணம்



“என் தாய் அரக்கி; தந்தை அந்தணன்” என்றாள்.

“அரக்கி நீ; மானுடன் நான்” என்றான்.

“இடைப்பட்ட நிலையில் தேவ மகளாக உன்னைச் சந்திக்கிறேன்” என்றாள்.

“நீ சீமாட்டி; நான் சீர் இழந்த நாடோடி” என்றான்.

“என்னை மணந்தால் நீ நாடாள்வாய்” என்றாள்.

“உன் பெற்றோர்” என்று தொடர்ந்தான்.

“தடை செய்ய மாட்டார்கள்; காந்தருவ மண்ம் என்று ஒன்று இருக்கிறது; அது காதலர்க்குத் தரப்பட்ட உரிமை” என்றாள்.

அளவோடு நகையாட விரும்பினான் இராமன்.

“என் தந்தையை நான் வாழ்த்துகிறேன்; அவர் என்னைக் காட்டுக்கு அனுப்பாவிட்டால் நீ எனக்கு எட்டாத கனியாக இருந்திருப்பாய்; அழகு மிக்க உன்னைச் சந்திக்கும் பேறு பெற்றேன்; நன்மை என்னை வந்து அடைந்திருக்கிறது” என்றான்.

அவன் பேசிய எள்ளல் உரையை உள்ளம் உவந்து சொன்ன ஏற்புரையாகக் கொண்டாள் அவள். “மீன் தூண்டிலில் விழுந்துவிட்டது” என்று நினைத்தாள். “விரித்த வலை வீண் போகவில்லை” என்று செருக்குக் கொண்டாள். சீதை என்னும் பெண் கொடி, அங்கு வேலியாக வந்து தடுப்பாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.