பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

185



“அறத்தின் செயல் இதுவாக இருக்குமானால் அடுத்த பிறவியில் உனக்கு நான் தம்பியாகப் பிறப்பது என் கடமை ஆயிற்று” என்று கூறித் தன் உயிரைப் போக்கிக் கொள்ள முடிவு செய்தான்.

அரக்கி அயோமுகியின் மாயையில் அகப் பட்டிருந்த இலக்குவன் அம்மாயையின்று விடுபட்டுத் தெளிவு பெற்றான். அவள் மூக்கை அறுத்து அங்கக் குறைவினை ஏற்படுத்தினான். அவள் இட்ட கூக்குரல் அக்காடு முழுவதும் எதிரொலித்தது. அது இராமன் செவிக்கும் எட்டியது. இது ஒர் அரக்கியின் குரலாகத்தான் இருக்க முடியும்” என்று இராமன் ஓரளவு அநுமானித்தான்.

அங்கையில் அக்கினி அத்திரம் எடுத்துக் கொண்டு ஒலி வரும் திக்கு நோக்கிப் புறப்பட்டான்.

புயற் காற்றைவிட வேகமாய் இலக்குவன் இருக்குமிடத்தை அடைந்தான். இலக்குவன் இராமனைப் பார்த்து “வள்ளலே! வருந்தற்க” என்று கூறினான். இழந்த கண்ணொளியை மீண்டும் பெற்றது போல் இராமன் மகிழ்ச்சி அடைந்தான். பிரிந்த கன்றை அடைந்த பசுவாய் விளங்கினான்.

“சென்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவை?” என்று கேட்டான் இராமன்.

“அயோமுகி என்னும் அரக்கியின் மூக்கையும், செவியையும், உதடுகளையும் அறுத்து முடித்தேன்; அவள் கூக்குரல் இட்டாள்; தப்ப விட்டேன்” என்றான்.