பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

கம்பராமாயணம்



“உயிரைப் போக்காமல் விட்டது உத்தமம், அதுதான் அறநெறி” என்று அறிவித்தான்.

துன்பம் நீங்கி அமைதி பெற்று வருணனை நினைத்து மந்திரம் கூறினான் இராமன். அவன் மழை நீரைத் தர அதனைக் குடித்து இருவரும் நீர் வேட்கை தணித்தனர். அந்த மலையில் மணல் பரப்பில் இலக்குவன் அமைத்துக் கொடுத்த மரப் படுக்கையில் இராமன் படுத்துக் கொண்டான்; உணவும், உறக்கமும் இன்றி வேதனைப் பட்டான், சீதையின் நினைவு அவனை வாட்டித் துயில் இழக்கச் செய்தது.

கவந்தன் வதை

சீதையைத் தேடி இருவரும் விடியற்காலையில் விரைவாய்ச் சென்றனர். கவந்தன் ஒரு தனிப்பிறவி யாய் இருந்தான். இருந்த இடத்தில் இருந்தே எவ் உயிரையும் எட்டி வளைத்துப் பிடிக்கும் கரங்களை உடையவன் அவன், எறும்பு முதல் யானை ஈறாக எல்லா உயிர்களும் அவன் கையில் அகப்பட்டன. காட்டில் வாழும் உயிர்ப் பிராணிகள் அனைத்தும் அஞ்சி நடுங்கின. திக்குகள் அனைத்தையும் தன் கையில் அகப்படுத்திய நீண்ட கரங்களுக்கு இடையே இராமனும் இலக்குவனும் அகப்பட்டுக் கொண்டனர்.

இது அவர்களுக்குப் புதுமையாய் இருந்தது. “இது அரக்கர் செயலாய்த்தான் இருக்க வேண்டும். அதனால், சீதை மிக அண்மையில்தான் இருக்க வேண்டும்” என்று இராமன் கூறினான்.