பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

கம்பராமாயணம்



சுக்கிரீவனோடு நட்பு

அனுமன் சுக்கிரீவனை அடைந்து இராம இலக்கு வரைப் பற்றிய செய்திகளை எல்லாம் விரிவாய்க் கூறினான்; “'இராமன் தன் மனைவி சீதையைப் பிடித்து துயருறுகிறான்; இராவணன் அவளைச் சிறைப் பிரித்து, மறைத்து வைத்து இருக்கிறான், சீதை சிறை வைக்கப் பட்டுள்ள இடம் தேட உன் இன்துணையை நாடி வந்துள்ளான்; உன் நட்பை விரும்புகிறான்; அவன் இங்கு வந்தது உனக்கும் நல்லது; துன்பம் விடிவுபெற அவன் உனக்கு உதவுவான்” என்று அனுமன் சுக்கிரீவனிடம் தெரிவித்தான்.

செய்தி கேட்டுத் தன் வாழ்வு உய்தி பெறும் என்ற நம்பிக்கையை அடைந்தான் சுக்கிரீவன். வானரத் தலைவனாகிய அவன் மானுடர் தலைவனாகிய இராமனை அடைந்து அடைக்கலம் பெற்றான். இருவரும் இன்னுரையாடி நல்லுறவு கொண்டு, நட்பு உடன்படிக்கை யும் செய்து கொண்டனர். குகனோடு ஐவராய் விளங்கிய தசரதன் மக்கள், சுக்கிரீவனோடு அறுவராயினர்.

“கடந்தது போகட்டும்; இனி நாம் நடப்பதைக் கவனிப்போம்; சுகதுக்கங்களில் இருவரும் பங்கு பெறுவோம்; உனக்கு வரும் கெடுதி எனக்கு உரியதாய் ஏற்பேன்; எனக்கு வரும் துன்பம் உனக்கு வந்தது ஆகும்; உன்னுடைய பகைவர் எனக்கும் பகைவர்; என் பகைவர் உன்பகைவர்; என் நண்பர் உனக்கு நண்பர்; உன்னுடைய நண்பர் எனக்கு நண்பர்” என்று இராமன் அறிவித்தான்.