பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

195



இருவரும் உள்ளம் கலந்து, இனிய நண்பர் ஆயினர்; வானரர் ஆரவாரம் செய்து வாழ்த்துக் கூறினர் அனுமன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். சுக்கிரீவன் இராமன் இலக்குவரை விருந்துண்ண அழைத்தான்; காயும் கனியும் கிழங்கும் கொண்டு வந்து வைத்தான்; அவற்றை உண்டு அளவளாவினர்.

“நீயும் நின் மனையும் சுகமா?” என்று கேட்டான் இராமன்.

மூடியிருந்த கதவுகள் திறந்தன. அடக்கி வைத்த வேதனை வெளிப்பட்டது; கடந்த காலச் செய்திகளை நடந்தவாறு உரைத்தான்.

“வாலியும் யானும் உடன் பிறந்தவர்; அண்ணனிடம் அளவில்லாத பாசமும் மதிப்பும் காட்டினேன்; இராவணனும் அவன் வலிமைக்கு அஞ்சி அடங்கி இருந்தான். போரில் மாற்றான் வலிமையும் அவனை வந்துசேரும்; அத்தகைய வரவலிமையும் உரமும் பெற்றிருந்தான்; சிவபக்தனாய் இருந்தான்; சீலம் மிக்க வனாயும் விளங்கினான்.

“மாயாவி என்ற அசுரன், இவனிடம் வலியப் போருக்கு வந்தான்; வாலிக்கு அஞ்சிய அவன், ஒடி ஒரு பிலத்துள் நுழைந்து ஒளிந்தான்; அவனைத் தேடி வாலி பின்தொடர்ந்தான்; வாலி என்னைப் பார்த்து, “அவன் தப்பி ஓடிவிடக் கூடும்; உன்னை நம்பி நான் உள்ளே செல்கிறேன்; நீ அவனைத் தடுத்து நிறுத்தக் காவல் செய்; இத என் ஏவல்” என்று கூறி அப்பிலத்துள் நுழைந்தான்.