பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

கம்பராமாயணம்



“திங்கள் இருபதும் எட்டும் சென்றன; வாலி குகையை விட்டு வெளியேறிய பாடில்லை; “மாயாவி அவனைக் கொன்று தின்று முடித்து இருப்பான்” என்ற முடிவுக்கு வந்தோம்; என்னுடைய அமைச்சர் என்னை நாட்டாட்சியை ஏற்குமாறு வேண்டினர்; எனினும் நான் அதற்கு இசையவில்லை; பிலத்துள் யானும் நுழைந்து அசுரனை அழித்து வருவதாய்க் கூறிச் செயல்பட்டேன்; அமைச்சர் என்னைத் தடுத்து நிறுத்தினர்; “கடமையை விட்டு மடமையாய் நடப்பது தகாது” என்று அறிவித்தனர்; நாட்டுக்கு நல்லரசு தேவை என்பதை வற்புறுத்தினர்; வாலி வரமாட்டான்; வந்தாலும், விவரம் சொல்லி அவன் மன்னிப்பைப் பெறமுடியும்” என்று அறிவுரை கூறினர். வேறு வழியில்லாமல் கோல்ஏந்தும் வேந்தனாய் மாறினேன்; ஆட்சி பீடத்தில் அமர்ந்தேன்; மாயாவி வெளியே வாராதபடி அப்பிலத்துள் வழியைக் கற்கள் கொண்டு கதவிட்டேன்; எதிர் பார்க்கவில்லை; வாலி மாயாவியைக் கொன்று, பிலத்துக் கற்களை விலக்கி வெளியே வந்தான்; “யான் அவனை அடைத்து வைத்து ஆட்சியைப்பற்றினேன்” என்று தவறாய் நினைத்தான்.

“என் தமையன் கால்களில் விழுந்து, தவறு செய்யவில்லை” என்று கூறி மன்னிப்பை வேண்டி னேன்; அவன் அதை நம்புவதாய் இல்லை; சினம் அடங்கவில்லை; சீறிப்பாய்ந்தான்; என்னைப் பிடித்து உடலைப் பிளக்க முற்பட்டான்; பிடியினின்று விடுபட்டு உயிருக்கு அஞ்சி ஒடினேன்; ஒடினேன்; ஒடினேன்; வாழ்க்கையின் கரை ஒரத்துக்கே ஒடினேன்; ருசியமுக பருவத்திற்கு ஓடி வந்து, அங்கு அடைக்கலம் பெற்றேன்;