பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

217



“புல்தரையில் இராமன் படுத்திருக்க, நான் இங்கே பொன் தவிசில் எப்படி அமர்வேன்; அவன் கீரை உணவு உண்ண நான் இங்கே சோறும் கறியும் எப்படி அருந்துவேன்? நான் போய்த்தான் அந்தக் கீரை உணவும் சமைக்கவேண்டும்; அதனால், விரைவில் புறப்படுக” என்றான்; அவன் உபசாரங்களை இலக்குவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

சுக்கிரீவன் அனுமனிடம் “எஞ்சிய படைகளைத் திட்டிக் கொண்டு உடன் வருக” என்று கூறிவிட்டு இலக்குவனோடு சென்று, உள்ள படைகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

இராமனை அடைந்து, அவன் திருவடிகளை வணங்கிக் கால தாமதத்துக்கும், தான் இன்பத்துள் வைகிக் கடமையில் காலம் கடத்தியமைக்கும் சுக்கிரீவன் மன்னிப்பு வேண்டினான்; அவனைத் தன் தம்பி பரதனாகவே மதித்து அவனிடம் இன்னுரை பேசி, அனுமனைப் பற்றி விசாரித்தான்.

அனுமன் பெரும்படையுடன் பின் தொடர்ந்து வருவதாகக் கூறி அவனை மகிழ வைத்தான். இராமனும் அவனை அன்புடன் வரவேற்று ஒருநாள் ஒய்வெடுத்துக் கொண்டு மறுநாள் வந்து சேருமாறு சொல்லி அனுப்பினான்.

இராமன் அனைவரும் நீங்கியபின் தானும் தன் தம்பியுமாய்ப் பிரிந்த சீதையின் நினைவோடு கவலை நிரம்பியவனாய் அன்றைய பொழுதைக் கழித்தான்.