பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கம்பராமாயணம்



“தருகை எது வாயினும் தயங்கேன்” என்று கூறினான். கேட்பது எதையும் தருவதாய் வாக்கும் அளித்தான்.

“யான் கேட்பது பொன்னும் பொருளும் அல்ல; பூவும் வழிபாடும் அல்ல; உன் நன்மகன் இராமன்! அவனை என்னுடன் அனுப்புக” என்றார் முனிவர்.

கேட்டதை அரசனால் மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் மகனைவிட்டுப் பிரியவும் அவனால் இயலவில்லை.

“அதைத் தவிர வேறு ஏதேனும் கேட்டால் உவப்பேன்” என்றான்

“வந்ததே அவனுக்காகத்தான்; தருவேன் என்று கூறியபின் மறுப்பு ஏன்?” என்றார் முனிவர்.

“துறவிக்கு இவன் எவ்வகையில் உதவுவான்; இவனை மறப்பதற்கு வழி தேடின் நலமாகும்” என்றான் வேந்தன்.

“நான் துறவிதான்; அறம் தழைக்க அவனை அழைக்கின்றேன். இழைக்கும் வேள்விகளை அழிக்கும் அரக்கரை ஒழிக்கும் வகைக்கு அவன் வந்து உதவ வேண்டும்” என்றார் முனிவர்.

“போர்ப் படை காணாத பச்சிளம் பாலகன் என் மகன்; தேர்ப்படை கொண்டு உமக்குத் துணையாக நானே வருகிறேன்” என்றான் வேந்தன்.

“கேட்டது தருவேன் என்றாய்; வேட்டது தருவாய் என்று கேட்டேன்; வாய்மை தவறாத மன்னன் நீ;