பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

கம்பராமாயணம்



“தெருவிலே போகிற வம்பை யாரும் விலைக்கு வாங்கமாட்டார்கள். தொடக்கத்தில் இவன் நல்லவனாக நடிப்பான்; ஏமாறும்போது இவன், தன் பாடத்தைப் படிப்பான்; இவன் ஒரு ஒட்டைப்படகு இவனைக் கொண்டு நாம் கரையேற முடியாது; நட்டாற்றில் தள்ளி விட்டுத் தன் நாயகனிடம் போய்ச் சேர்ந்துவிடுவான்” என்று நீலன் ஒலமிட்டான்.

இராமன் மாருதியை அழைத்தான்; மாற்றுக் கருத்து இருந்தால் உரையாற்றலாம், என்றான்.

அரசியல் அறிந்த அனுமன், “இவனைத் தூயவன் என்றோ, தீயவன் என்றோ அவசரப்பட்டு முடிவு செய்ய இயலாது; இவனுக்கு ஏதோ ஒர் உட்கருத்து இருக்க வேண்டும்.”

“நாட்டிலே பரதனுக்கும், காட்டிலே என் தலைவனுக்கும் ஆட்சி தந்திருக்கிறாய்; இங்கே தக்க சமயத் தில் வந்து முந்திக் கொண்டான் இவன்; இலங்கை தனது ஆகும் என்ற ஆசையால் வந்திருக்கலாம். ஆட்சி காரணமாய் வந்திருக்கலாம்; ஆசை யாரை விட்டது?”

“இவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை அறிவது, அறிய விரும்புவது தேவை இல்லை; அது பள்ளியாசிரியர்தான் சான்றிதழில் எழுத வேண்டும்; இது பகைப்புலம்; அதனால், நமக்கு நன்மையா தீமையா? என்று முடிவு செய்வதுதான் நல்லது” என்றான்.

“நாமாக விரும்பி அவனை நயக்கவில்லை; அவனாக வந்தால் அவனை பயன்படுத்துவதில் தவறு இல்லை.”