பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கம்பராமாயணம்



உம் மகனுக்குத் தருவது வலிது. அதனால் அவனுக்குப் புதுப் பயிற்சிகள், முயற்சிகள், வெற்றிகள் காத்துக் கிடக்கின்றன. அவனை அனுப்பி விட்டு மறுவேலை பார்; அவனைத் தடுக்க நீர் யார்?” என்று நன்மைகளை எடுத்துக்கூறிச் செல்வதன் நன்மையை அறிவுறுத்தினார்.

இருள் அகன்றது; ஒளி தெரிந்தது, பாசத் திரை தன் பார்வையை மறைத்திருந்தது. அதை விலக்கிவிட்டு, விழி பெற்றவனாகத் தசரதன் நடந்து கொண்டான்; வழி தவறியதற்கு வருந்தினான்; குருடனாக நடந்துகொண்ட அவன், புத்தொளி பெற்று, மகனை முனிவனுடன் அனுப்பி வைத்தான்.

விசுவாமித்திரர் இராமனைத்தான் கேட்டார்; இலக்குவன் வருவதைத் தடுக்கவில்லை. நிஜத்தை விட்டுப் பிரியாத நிழலாக இளையவன் இலக்குவன், அழைக் காமலே அண்ணன் இராமனைப் பின் தொடர்ந்தான்; முனிவன் முன்னே நடக்க, அவன் பின்னே இவ் விளையவர் இருவரும் தொடர்ந்து நடந்தனர்.

உடன்போதல்

கூட்டை விட்டுப் பறவைகள் வெளியே பறந்து செல்வதுபோல, நாட்டை விட்டுக் காட்டு வழியே முனிவனுடன் சென்றனர்; மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், அசையும் கொடிச் சீலைகளும், அவர்களை வழி அனுப்பின. வானவில்லின் வண்ண நிறங்களும், பிரபஞ்சத்தின் பேரொளியும் அவர்கள் கண்ணைக் கவர்ந்து மகிழ்வு ஊட்டின. காந்தத்தின் பின்