பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

293



“நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்;
தார்க்கோல மேனிமைந்த என் துயர்தவிர்த்தியாயின்
கார்க்கோல மேனியாயனைக் கூடுதி கடிதிள்”

என்றான்.

“எனக்கு என்று கடமைகள் சில இருக்கின்றன; உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய எனக்குத் தெரியாது; செஞ்சோற்றுக்கடன் செய்து முடிப்பதில் நான் நாட்டமுடையவன்”.

“தேவரும் பிறரும் போற்ற ஒருவனாய் உலகினை ஆண்ட நம் அண்ணன், இராவணன் சுற்றமும் படைகளும் தனக்காக உயிர்விட்டுத் தன்னுடன் விழுந்து கிடக்கத் தம்பியருள் ஒருவரும் இன்றி மடிந்து கிடக்கலாமோ? உலகம் என் சொல்லும்?”

“வாழ்வினில் பங்கு கொண்டேன்; சாவில் பங்குகொள்ளாது அங்கு வந்தால் அது மானம் கெட்ட வாழ்வு; அதை நிதானமாய் நினைத்துப்பார்”.

“இராவணன் தவறு செய்கிறான்; சொல்லிப் பார்த்தோம்; பயனில்லை; அவன் தலைமையை ஏற்ற, நாம் முன் அவனுக்காக அவனுக்கு மடிவதே அறம்: பகைவரோடுகூடி அவனை எதிர்த்துப் போரிடுவது அன்று” என்றான்.