பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

கம்பராமாயணம்



அவளைச் சோகவடிவில் அசோக வனத்தில் முன்பு இருந்த நிலையிலேயே கண்டான்; காற்றுக்கு அசையும் இலை தழைகளைப்போல அவள் உயிர்ப்பு அசைவைக் காட்டியது; அனுமனுக்குச் செல்ல இருந்த உயிர் திரும்பி வந்தது.

‘சீதை சாகவில்லை; அவர்கள் திட்டம் வேகவில்லை’ என்பதை உணர்ந்தனர். ‘திசை திருப்பச் செய்த சூழ்ச்சி இது’ என்பதை அறிந்தனர். அரக்கன் மகன் இந்திரசித்து நிகும்பலை வேள்வி நடந்துவதை அறிந்து, குரங்குப் படைகளோடு சென்று அவனைத் தாக்கினர்; வெண்ணெய் திரளும் போது அவனுக்குத் தாழி உடைந்தது; எடுத்த வேள்வி முற்றுப் பெற வில்லை; நிறைவுரை எழுதுதற்கு முன் இலக்குவன் விட்ட அம்புகளுக்கு அவன் பதிலுரை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

போரில் தேரை இழந்தான்; படைகள் அழிந்தன; தனித்து நின்று அவன் போர் செய்து பழக்கம் இல்லை; செல்வ மகன்; அவன் கால்கள் செருக்களத்தில் பதியா; மண்ணில் படியா; விமானம் ஏறி விண்ணில் பறந்து மன்னன் இராவணன் முன் சேர்ந்தான்.

தேர்வில் தோற்றுவிட்டுத் தேர்வாளர்களைப் பழிக்கும் மாணவரைப் போல் பகைவர்மேல் பழி போட்டு விட்டுப் பரிதாபகரமாய் நின்றான். படைகள் அழிவு பெற்ற மனக்கலக்கத்தோடு மாரதனான இந்திரசித்து, அழிவின் விளம்பைக் கண்டான்; இது வரை “மூத்தோர் வார்த்தைகள் அர்த்த மற்றவை” என்று அறிவித்த அவன், மனம்மாற்றி வயதுக்கு மீறிய அறிஞனாய்ச் செயல்பட்டான்.