பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

37



தரையில் விழுந்தாள். மை வண்ண அரக்கி, செவ் வண்ணச் சிலையாக நிலை மாறினாள். கறுப்பி என்று பேசப் பட்டவள் செவ்வலரி மலரானாள். மண் சிவந்தது; அதில் அவள் கண் சிவந்து துடித்துக் கதறினாள்; அந்த ஒலி யானையின் பிளிறல்போல் நாற்புறமும் சிதறியது. இராவணனது கொடிக் கம்பம் சாய்ந்ததைப் போல இந்தக் கொடிய கம்பம் கீழே விழுந்தது. இராவணன் அழிவை முன் கூட்டி அறிவிப்பதுபோல் இந்தச் சாய்வு காணப் பட்டது.

மக்கள் புரட்சி முன் கொடுங்கோல் மன்னன், ஆட்சி இழந்து வீழ்ச்சி உற்று அலங்கோலம் அடைவதைப் போல இக்கோர அரக்கி பிணக்கோலம் கொண்டாள்; இதைக் கண்ட வானவர் ஆரவாரித்தனர்; மகிழ்ச்சி அடைந்தனர். தீமை அழியவும், அறம் தழைக்கவும் இராமன் சரம் செயல்பட்டதை அறிந்து அவர்கள் ஆசி கூறினர்.

“மாவீரன்” இவன் என்று தேவேந்திரன் பாராட்டினான். தேவர்கள் தெய்வப் படைக் கருவிகள் சிலவற்றை ஏற்கெனவே விசுவாமித்திர முனிவரிடம் ஒப்படைத்து இருந்தனர்; அவற்றைத் தக்கவனிடம் சேர்க்கச் சொல்லி அறிவித்திருந்தனர்; “தக்கோன் இவனே” என்று சொல்லி மிக்கோன் ஆகிய முனிவரிடம் “அப்படைகளை இராமனிடம் தருக” என்று அறிவித்தனர்.

மாமுனிவனும் தேவர்களின் ஏவல் கேட்டுக் காவல் மன்னன் ஆகிய இராமனுக்குப் படைக் கருவிகளைத் தந்தான்; அவற்றோடு எய்யும் ஆற்றையும் கற்பித்தான். அரிய படைப்பயிற்சி அவனுக்குக் கிடைத்தது. ஆற்றல்மிக்க படைக் கருவிகள் அவனை அடைந்தன.