பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கம்பராமாயணம்



தம்பியருக்கு மணம்

இராமன் தானே தேடி அவளைக் கண்டான்; மனம் ஒத்த காதல் அவர்களைப் பிணைத்தது; “அவன் தேர்வு மெச்சத்தக்கது” என உச்சியில் வைத்துப் புகழ்ந்தனர்; “இவளைத் தவிர இராமனுக்கு வேறு யாரும் மனைவியாக முடியாது” என்று அவள் தகுதியை மிகுதிப்படுத்திப் பேசினர்; “'செல்வமும் சிறப்பும் பெற்று நீடித்து வாழ்க” எனக் கோடித்து வாழ்த்தினர்.

சீதை மண்ணில் கிடைத்த மாணிக்கம்; பூமகள் தந்த புனை கோதை, அவள் சனகன் வளர்ப்பு மகள். மற்றொருத்தி பிறப்பு மகளாக அவளுக்கு வாய்த்தாள்; அவள் பெயர் ‘ஊர்மிளை’ என்பது; இலக்குவனை அவள் தன் இலக்காகக் கொண்டாள். சனகன் தம்பி மகளிர் இருவரை முறையே பரதனுக்கும் அவன் தம்பி சத்துருக் கனனுக்கும் மணம் முடித்தனர்.

மிதிலையில் பெண்தேடு படலமும், மணம் முடிக்கும் படலமும் முடிந்தன. இவற்றைப் பெரியவர்கள் முன்னிட்டுப் பின்னிட்டதால் கவிதைகளும் காவியங்களும் விவரித்துப் பேசவில்லை; சாதாரண நிகழ்ச்சிகளாய் நடந்து முடிந்தன; ஆரவாரம் இன்றி, அமைதியாய் நிகழ்ந்தன. பெண் எடுத்த இடம் ஒரே இடமாய் இருந்ததால் அதனையே மடம் ஆகக் கொண்டு சனகன் விருந்தினராய்த் தங்கினர்; உணவும் களியாட்டமும் கொண்டனர். மன்னர் தம் சுற்றமும் படைகளின் ஆட்களும் உண்டாட்டுப் படலத்தில் உறங்கி மகிழ்ந்தனர்.