பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கம்பராமாயணம்



தேர் ஒட்டி தன் நிலை மறந்து பேசுவதை தசரதன் விரும்பவில்லை; இராமனை அழைத்து வரச் சொன்னான்.

“அப்பம் எண்ணச் சொன்னேனே தவிர அதில் எத்தனை குழிகள் உள்ளன என்று உன்னைக் கேட்கவில்லை”.

“கடமையைச் செய்; கதைகள் பேசிக் கொண்டு இங்கு உன் மடமையைக் காட்டாதே”.

“தேரைச் செலுத்து; இராமனை இங்கு அழைத்து வா” என்று ஆணையிட்டான்.

அதற்குமேல் அங்கே அவன் நிற்கவில்லை. காற்றிலும் கூடிய வேகத்தோடு காகுத்தன் அரண் மனையை அடைந்தான்.

மனையில் இராமன், தன் மனைவியோடு உரையாடிக் கொண்டிருந்தான்; மகிழ்வு நிரம்பிய சூழலில் அவன் தன் அகமுடையாளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அவனிடம் என்ன சொல்வது? உண்மை சொல்வதா? மன்னன் உரைத்தை மட்டும் உரைப்பதா?

“ஆட்சி உனக்குத் தரத் தசரதன் அழைக்கின்றான் என்று கூறவில்லை. அப்படிக் கூறினால் அது மிகைப்படக் கூறுதல் ஆகும்; அதிர்ச்சியும் தருவது ஆகும். ஆசைகளைத் தூண்டிவிட்டால் அவை அணைக்க முடியாமல் போகும்; ‘செய்தி சொல்ல வந்தவன்’ என்ற தன் நிலையை மறக்காமல் செப்பினான்.

“'காவலன் உன்னைக் காண ஆவல் கொண்டுள்ளான்” என்றான்.