பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தான் கம்பனுக்கு இணையாகவோ அல்லது ஒரு முனை எற்றமாகவோ சொல்லலாம். ஆனால் வியாஸ பாரதம் ஒரு சம்ஹிதையேயாகிவிடுகிறது. அதையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல. ஆனால் கவிதாரீதியாக மாத்திரம் ஒப்பிட்டுப் பார்ப்பதாயிருந்தால் கம்பராமாயணம் வியாஸ பாரதத்துக்கு அதமபக்ஷம் சமமாகவாவது இருக்குமே ஒழிய எள்ளளவுகூடத் தாழாது. ஆகிலும், கவிகளில் ஆதியானவரும், ராமாயணத்துக்கே முதனூலாசிரியரும்,

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன், எனை !
வைதவைவின், மராமரம் ஏழ் தொளை
எய்த எய்வதற்கு எய்தியமாக் கதை
செய்த செய் தவின் சொல் நின்ற தேயத்தே!

என்றும், ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி, மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன். என்றும், கம்பனாலேயே தன்னால் ஏணிவைத்துப் பார்த்தாலும் எட்ட முடியாதவர் என்று கூறப்பட்டவருமான வால்மீகி முனிவரின் கவிதா சாமார்த்தியத்தை அவனுடைய சாமார்த்தியத்தைவிட மேலானது என்று சொல்ல வேண்டாமா என்று ஓர் கேள்வி பிறக்கும். ஆனால் இரண்டு காவியங்களையும் பாரபக்ஷமில்லாமல் சிரத்தையோடும் பொறுமையோடும் படித்துப் பார்த்தால் வழி நூலானது முதனூலை வென்றுவிட்டது என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது!

இப்பேர்ப்பட்ட மகா காவியத்தை நமது நாட்டில் இப்பொழுது எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று பார்த்தால் தொகை மிக மிகச் சொற்பமானதாகத்தான் இருக்கும். பழைய தமிழ்ப் பண்டிதரின் பரம்பரை அனேகமாய் அற்றுப் போய்விட்டது. ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பாஷை தீண்டாச் சாதி-