பக்கம்:கரிகால் வளவன்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

வார்கள். இத்தகைய சத்தர்ப்பம் எப்போதும் கிடைக்காது” என்று சொன்னார்கள்.

பாண்டியன் யோசித்துப் பார்த்தான். தன் படைப்பலத்தில் அவனுக்கே நம்பிக்கை இல்லை. போரைத் தொடங்கிய பிறகு, வெற்றி காணாவிட்டால் பாண்டி நாட்டின் அமைதிக்கே இடையூறு நேர்ந்துவிடும். சிறிய சிறிய இடங்களை உடைய வேளிர்கள் தங்கள் நாட்டை இழக்கச் சித்தமாக இருக்கலாம். வழிவழி வந்த புகழையுடைய பாண்டிய மன்னன் அவ்வாறு இருக்க முடியுமா? நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று தெரிந்தால் இந்தப் போரை நடத்தலாம். இல்லையானால் சும்மா இருப்பதே நலம்.

பாண்டியனுடைய சிந்தனை இவ்வாறு ஓடியது. அதனாடே மண்ணாசை குறுக்கே வந்தது. ‘சோழ நாடு நம் கையில் கிடைப்பதென்றால் எத்தனை இலாபம்! சோறுடைய சோணாட்டைப் பெற்றவன் மனித குலம் அத்தனைக்கும் அரசன்போல இருப்பானே! இவ்வளவு பெரிய நாட்டைப் பெறுதற்குரிய சமயம் வந்திருக்கிறது. துணை புரிவதாக வலிய வந்து வேளிர் பலர் உறுதி கூறுகின்றனர். வலிய வந்த சீதேவியை உதைத்துத் தள்ளுவதா?’ இந்த எண்ணம் அவனைப் பின்னும் சிந்தனையில் ஆழச் செய்தது. போரில் வெற்றி காணமுடியுமோ என்ற ஐயமும், இவ்வளவு அரிய சந்தர்ப்பத்தை இழப்பதா என்ற ஆசையும் அவன் உள்ளத்தே எழுந்து போராடின. ஆசை தான் மிகவும் வலிமை உடையதாக இருந்தது. எவ்வளவு படைகளைப் புதிதாகச் சேர்க்கலாம் என்று யோசித்தான்.