8. நாட்டு வளம் பாடிய நங்கை
கரிகால் வளவனுடைய புகழ் பரவப் பரவ அவனைப் புலவரும் பாணரும் நாடி வந்தார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் நிறுவிய பட்டி மண்டபத்தில் புலவர்கள் தங்கள் தங்கள் கவிதையை அரங்கேற்றினர்கள்; தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்தார்கள். மதுரையில் இருந்த சங்கத்தைப் போன்ற சிறப்புக் காவிரிப்பூம்பட்டினத்துப் பட்டி மண்டபத்துக்கும் உண்டாயிற்று. சேர சோழ பாண்டிய நாடுகளிலிருந்து புலவர்கள் அடிக்கடி வந்து கரிகால் வளவனைப் பாடிப் பரிசு பெற்றுச் சென்றாகள். வளவன் உறையூரில் சில காலமும் காவிரிப்பூம்பட்டினத்தில் சில காலமுமாக இருந்து வந்தான்.
ஒரு நாள் வளவனிடம் ஒரு பெண் புலவர் வந்தார். அவருக்குத் தாமக்கண்ணி என்று பெயர். அவர் கால் முடம். ஆதலின் முடத்தாமக்கண்ணியார் என்று யாவரும் அவரைக் குறிப்பிட்டுக் கூறுவர். உறுப்புக் குறை இருந்தால் அதை அடையாளமாகக் கருதுவார்களேயன்றி இழிவாக எண்ணுவதில்லை. கரிகாலன் என்ற சக்கரவர்த்தியின் பெயரே அங்கத்தைக் குறித்து வந்ததுதானே? கரிந்த காலை உடையவன் என்ற பொருளை உடையது அது.
முடத்தாமக் கண்ணியார் கரிகாலனுடைய அவைக்களத்துக்கு வந்தார். வழக்கம்போல