பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

உரையில் எட்டுத்தொகை நூல்கள் பின் வருமாறு பெயர் தரப் பெற்றும் வரிசைப்படுத்தப்பெற்றும் உள்ளன:"அவர் களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் குறுந் தொகை நானூறும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறு நூறும் பதிற்றுப் பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும்.... என்று இத்தொடக்கத்தன.” என்பது அந்த உரைப் பகுதி

நெடுந்தொகை:

மேலே, அகநானூறு என்னும் நூல் 'நெடுந்தொகை நானூறு’ என்னும் பெயருடன் முதலில் நிறுத்தப்பட்டுள்ளமை காண்க. எட்டுத் தொகை நூல்களுள் நெடுந்தொகையே முதன்மையானது. “நெடுந்தொகை முதலாகிய தொகை யெட்டும் என்றவாறு"- என்னும் பேராசிரியரின் (தொல்காப்பியம்- செய்யுளியல்-236) உரைப்பகுதியும், “அவை நெடுந்தொகை முதலிய தொகை யெட்டுமாம்"என்னும் நச்சினார்க்கினியரின் (தொல். செய்.236) உரைப் பகுதியும் மேலும் இதற்குச் சான்று பகரும்.

இந்நூலுக்கு அகநானூறு என்னும் பெயருக்கு முன்பு, நெடுந்தொகை என்னும் பெயரே வழங்கப்பட்டமையை, இந்நூலின் பாயிரப் பாடல்களில் உள்ள, ‘முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்கு’, ‘தொகையில் நெடிய தனை’ என்னும் பகுதிகளாலும் அறியலாம்.

தொகுப்பு வரலாறு:

இந்நூல் தொகுக்கப்பட்ட வரலாற்றை ஆய்வோமாயின், இந்நூலின் முதன்மையும் நெடுந்தொகை என்னும் பெயர்க் காரணமும் தாமே விளங்கும். கடைச் சங்க காலத்தில் எண்ணிறந்த ஆசிரியப் பாக்கள் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தன. அவற்றைச் சங்கத்தார் திரட்டினர். புறப்-