பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

-தாழ்த்தியும் பாரதியை உயர்த்தியும் கூறுகின்றனர். இது சரியன்று. இருவர் கூற்றிலும் இருவேறு வரலாற்றுப் பின்னணிகள் தொக்கி நிற்கின்றன. ஒளவையார் காலத்தில் ஊருக்கு ஊர் அரசர்; எப்போதும் போர், கொலை, தீவட்டிக் கொள்ளை, கற்பழிப்பு, பெண்களைச் சிறையெடுத்துச் செல்லல், அமைதியின்மை, பிணி, வறுமை முதலியவை தலைதூக்கியிருந்தன. அதனால் ஒளவையார், ‘முனை முகத்து நில்லேல்; ‘போர்த் தொழில் புரியேல்' என்று அறிவுறுத்தினார். ஆனால், பாரதியார் காலத்தில் நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. வெள்ளையரை வெளியேற்றக் கொடியேந்திக் கொக்கரித்துக் கொண்டு விடுதலைப் போர் முனைக்குச் செல்லுங்கள் என்று பாரதியார் மக்களைத் தட்டி எழுப்பினார். எனவே, ஒளவையாருக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் உண்டு; பாரதியாருக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் உண்டு. இத்தகையன காலக் கண்ணாடிகளாகும். எனவே, இலக்கியமும் வரலாறும் காலக் கண்ணாடிகளே.

5-4. கற்பனை மனம்:

பாரதியார், வரலாறு என்னும் அடிப்படையில் பாடியுள்ள பகுதிகள் கற்பனை கலவாதவைகளாகும். இவற்றுள்ளும், இலக்கிய நயச் சுவை என்னும் பெயரால் கற்பனை மனம் ஆங்காங்கே ஒரு சிறிது கமழலாம். இதை ஒரு பெரிதாகப் பொருட்படுத்தலாகாது. ஆனால் குயில் பாட்டு போன்றவை கற்பனை கலந்தன; கண்ணன் பாட்டு போன்றவை கற்பனையே.

5-5 உரை நடை இலக்கியம்:

பாரதியார் கற்பனையாகவும் கற்பனை கலந்தும் உரைநடையில் பல கதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்-