பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

எனச் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராகக் குறிப்பிட்டுள்ள காடவர் கோன் கழற்சிங்கன் இந்த மூன்றாம் நந்தி வர்மனாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஓர் ஆராய்ச்சி.

நூல் நயம்:

நந்திக் கலம்பகத்தில் நயமான பாடல்கள் பல உள்ளன. ‘மறம்’ என்னும் தலைப்பிலுள்ள பாடல் சுவைத்து மகிழத் தக்கது. நந்திவர்மனின் படை மறவன் ஒருவன்-வயதான கிழவன்; அவன் பெண்ணை மணம் பேசி வருமாறு வேற்று வேந்தன் ஒருவன் தூது அனுப்பினான். கிழமறவன் தூதனை நோக்கிக் கூறுகிறான்: “அடே தூதா! நான் கிழவன்; என் வில் ஒடிந்துள்ளது; வில்லின் நாண் அறுந்துள்ளது; கையில் இருப்பது ஒரே அம்பு; நான் தளர்ந்து விட்டேன்-என்றெல்லாம் என்னை எளிமையாக எண்ணி உன் மன்னன் பெண் கேட்டுவர உன்னை அனுப்பினானா? அப்படி யொன்றும் என்னை எளிமையாக எண்ணி விடாதீர்கள்: நந்திவர்மனது தெள்ளாற்றுப் போரிலே எதிரிகளின் மேல் அம்பு எய்து எய்து என் வில் சிதைந்தது; நாண் தளர்ந்தது; ஓர் அம்பே மிஞ்சியது. அந்தப் போரில் எங்களிடம் தோற்றுப்போன எதிரிகளுடைய யானைகளின் கொம்புகளைக் கொண்டுவந்துதான் இதோ இந்தக் குடிசைக்குக் காலாகவும்மேட்டு வளையாகவும் போட்டுக்கட்டியுள்ளேன்; வேண்டுமானால் குனிந்து பார். இன்னும் உங்களிடம் யானைகள் மிஞ்சியுள்ளனவா? என் குடிசைக்கும் இன்னும் சில கொம்புகள் தேவைப்படுகின்றன; இதோ புறப்படுகிறேன்” -என்னும் பொருள்பட மறக்கிழவன் கூறியதாக உள்ள பாடலை இதோ சுவைப்போம்: