பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

இவை, பால காண்டம்-மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ள பாடல்கள். இனிமேல்தான் கயிறு இழுப்புப் போட்டி அறிவிக்கப்படுகிறது:-

இருவரும் பற்றி இழுக்கும் கயிறு என்பது இருவரின் நோக்குதான்-பார்வைதான்; இழுக்கும் கைகள் இருவரின் உள்ளங்களே. இராமன் தன் உள்ளமாகிய கைகளால் நோக்காகிய கயிற்றைக் கொண்டு சீதையைத் தன் பக்கம் இழுக்கிறான்; சீதையும் தன் உள்ளமாகிய கைகளால் தன் நோக்காகிய கயிற்றைக் கொண்டு இராமனைத் தன் பக்கம் இழுக்கிறாள். இருவரும் சமமான காதல் வலிமை உடையவா்கள்.

உலகத்தில் நடைபெறாத இந்த வியத்தகு கயிறு இழுப்புப் போட்டியில், இராமன் சீதையின் இதயத்திலும், சீதை இராமனது இதயத்திலுமாக இடம் மாறிப் புகுந்து அடைகின்றனர். இதை அறிவிக்கும் பாடலாவது:

"பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து;
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்”.

மேற் கூறிய பாடல்களின் அடுத்த பாடல் இது. இப் பாடலில், பாசம் என்பது கயிறு ஆகும். ஈர்த்தல் என்பது இழுத்தல் ஆகும். நோக்கம் கயிறாகும்; உள்ளம் கைகளாகும்.

ஆங்கிலத்தில் “Tug of War" என்று கூறப்படும் கயிறு இழுப்புப் போட்டி, இவ்வாறு எங்கேயாவது இடம் மாறி அடையும்படி நடந்திருக்கிறதா?

இந்த இடமாற்றம், கம்பன் காட்டும் கயிறு இழுப்புப் போட்டியில் நடைபெற்றிருப்பது வியப்பிற்கு உரியதன்றோ!