பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81


வரலாற்றுப் பகுதி

9. இலக்கியத்தில் வரலாற்றுக்
குறிப்புகள்

'இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள்' என்னும் தலைப்பு, 'எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை’ என்னும் கதை மொழிபோல் தோன்றுகிறது. அந்தக் கதை மொழி ‘எங்கள் அப்பா குதிருக்குள் இருக்கிறார்’ என்பதைக் குறிப்பாக அறிவிக்கிறது. அதுபோல, இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள் என்னும் தலைப்பு, ஒரு காலத்தில் இலக்கியம் வரலாறாகக் கருதப்பட்டது-அல்லது-வரலாறு இலக்கியமாகக் கருதப்பட்டது-என்னும் குறிப்பினைத் தருவதுபோல் தோன்றுகிறது.

ஆம்; பன்னெடுங் காலமாக வரலாற்றை இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே பலர் எண்ணி வந்தனர். வரலாறு ஒரு நீதி இலக்கியம் என்பது அன்னாரது கருத்தாக இருக்கலாம். ஏன்-இன்றும் சிலர், வரலாற்றை ஓர் இலக்கியம் போல் கற்பனை கலந்து எழுதுகின்றனர். இந்தக் கற்பனை கலந்த இலக்கியத்தை, வரலாறு அல்லது சரித்திரம், சரிதம்-சரிதை என்னும் பெயர்களாலே வழங்குகின்றனர். எடுத்துக் காட்டுகள்:- நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, தமிழ் நாவலர் சரிதை, இராம சரிதம், குமண சரிதம், புரூரவச் சக்கரவர்த்தி வரலாறு முதலியனவாகும். மேலும், முற்றிலும் கற்பனைக் கதைகளாய் உள்ளவற்றையும் சரித்திரம் என்னும் பெயரால் வழங்கக் காணலாம். வேத நாயகம் பிள்ளையவர்களின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் படைப்பு இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும். இவ்வாறு இன்னும் பல உள.