பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

யிரம் முதலியனவாம். வேறு சில இலக்கியங்களின் பெயர்கள் மட்டும் தெரிகின்றன-நூல்கள் கிடைக்கவில்லை.

இவற்றுள், எட்டுத் தொகைகளுள் ஒன்றாகிய புறநானூறு முழுவதும் சேர- பாண்டிய- சோழர் என்னும் முடியுடை மூவேந்தர்கள், சிற்றரசர்கள், குறுநிலமன்னர்கள், வள்ளல்கள், மறவர்கள், கலைஞர்கள் , புலவர்கள், பொது மக்கள் முதலியோரின் வரலாற்றுக் குறிப்புகள் பொதிந்து கிடக்கின்றன. மற்றொரு தொகை நூலாகிய பதிற்றுப்பத்து முழுவதிலும் பத்துச் சேரமன்னர்களின் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்துப் பாட்டில் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை,மலைபடு கடாம் ஆகிய நூல்களிலிருந்து பேரரசரும் சிற்றரசரும் ஆகிய குறிப்பிட்ட சிலருடைய வரலாற்றுக் குறிப்புகளை ஓரளவு அறிகிறோம்.

அடுத்து, கீழ்க் கணக்கு நூல்கள் பதினெட்டனுள் களவழி நாற்பது என்னும் நூலில், சேரமான் கணைக்கால் இரும் பொறையைச் சோழன் செங்கணான் பொருது வென்ற வரலாற்றுக் குறிப்பு புலவர் பொய்கையாரால் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும், கோவலன்-கண்ணகி-மாதவி-மணிமேகலை-சோழன் கிள்ளி வளவன், பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் முதலியோருடைய வரலாற்றுக் குறிப்புகளை அளிப்பது அனைவரும் அறிந்த செய்தி. முத்தொள்ளாயிரத்தில், பொதுவாக முடியுடை மூவேந்தர்களின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

மேற் குறிப்பிட்டவை யல்லாத சங்க இலக்கியங்களில், ஆங்கொரு பாடலிலும் ஈங்கொரு பாடலிலுமாகச் சிற்சில வரலாற்றுக் குறிப்புகள் இறைந்து கிடக்கின்றன.