பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

விவரித்தேன். பாரம்பரியம் என்ற நூலில் தாய் தந்தையர் குழந்தைக்கு அளிக்கும் திறமைகளைப்பற்றியும், சூழ்நிலையின் முக்கியத்தைப் பற்றியும் எழுதினேன்.

கருத்தரிப்பதற்குக் காரணமானவற்றைப் பற்றியும், அது வளர்ந்து குழந்தையாகப் பிறப்பது பற்றியும் இந்நூலிலே விளக்க முயன்றிருக்கிறேன்.

கரு வளர்ச்சியைப் பற்றிய முக்கிய அம்சங்களே இங்கு தரப்படுகின்றன. விரிவாக விவரிப்பது இந்நூலின் நோக்கமல்ல. அது வைத்தியக் கலையின்பாற்படும். அவ்வளவு விரிவாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதும் அவசியமாகத் தோன்றவில்லை.

விஷயம் எளிதாகப் புரிவதற்காக ஆங்காங்கு பல விளக்கப் படங்களையும் சேர்த்திருக்கிறேன். எளிதிற் பொருள் செய்து கொள்ள முடியாத கலைச் சொற்களை விளக்கும் குறிப்பையும் இறுதியிலே இணைத்திருக்கிறேன்.

இம் மூன்று நூல்களையும் எழுதி முடித்ததில் எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால் இவைகளிலே எல்லா உண்மைகளையும் பெய்துவிட்டேன் என்று யாரும் நினைக்கக்கூடாது. இன்னும் எவ்வளவோ உண்மைகள் இருக்கின்றன: இன்னும் தெரியாது மறைந்து கிடக்கும் உண்மைகளும் எத்தனையோ. இம்மாதிரி கலைகளிலே கடைசி வார்த்தையை யாரும் கூற இயலாது.

அவசியமாக ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டுவனவற்றைத் தந்திருக்கிறேன் என்பதுதான் எனது கருத்து.

குழந்தை உள்ளம், பாரம்பரியம் ஆகிய இரு நூல்களையும் படித்த அன்பர்கள் எனக்கு இந்த எண்ணத்தை வலியுறுத்தினர்கள். இதைப் படிப்பவர்களுக்கும் அதே கருத்து ஏற்படலாம் என்பது எனது நம்பிக்கை.

—-பெ. தூரன்