பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

வேண்டிய ரெண்டு கல்யாணங்களையும் கண் குளிரக் கண்டு முடிஞ்சதும் இதைப் போட்டுக் காண்பிக்க வேணும்னு இருந்தேன். அதுவரைக்கும் விதி சும்மா இருக்கல்லே !...” என்றார் அவர்.

ஞானபண்டிதன், “அப்பா ! இந்த டேப் ரெக்கார்டரை இனி நான் போட்டுக் கேட்டு என்ன ஆகப் போகுது ?... நீங்க நிம்மதியாய்த் தூங்குங்க அப்பா !...” என்று அன்பும் ஆதரவும் சொட்டிய குரலில் கெஞ்சினான்.

பெரியவர் சோமசேகர் விரக்தியுடன் சிரித்தபடி, “சரி, அப்புறம் உன் இஷ்டம்!” என்று சொல்லி, படுத்துக்கொண்டு விழிகளை மூட ஆரம்பித்தார்.

மறுபடியும் திரும்பி வந்தான் அவன். “அப்பா, நீங்க இல்லேன்னா, எனக்கோ அல்லது தங்கச்சிக்கோ வேறே யாருமே நாதி இல்லாமப் போயிடும் !.... முதலிலே, இந்த டேப் ரெக்கார்டரை போட்டு உடையுங்க ...” என்றான் அவன்.

“அப்படியே உடைச்சிடட்டுமா, ஞானபண்டிதா !”

“ம் !” என்றான் அவன்.

ஆனால், மறுகணம் நடந்தது என்னவென்று தெரியுமா ?

அதுதான் : ‘சஸ்பென்ஸ்’ !...