பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

பாதங்களை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். பட்டுரோஜாவின் பனி இதழ்களை வருடிவிட்ட மாதிரியான ஒர் இன்ப சுகத்தை அவன் அடைந்தான்.

‘குழந்தை வளர்ப்பு’ நூல் வடிவில் கிடந்தது.

இன்பசுகம் உடலில் உறைந்தது.

அடைந்த அவ்வின்ப சுகம் சுட்ட உண்மையை அவன் மனச்சான்று அறிந்திருந்தது.

உண்மை சுடும் என்பார்களே !

உள்ளே செலுத்திய காப்பி நெஞ்சில் கரித்தது. மண்டையை உடைத்தது. கட்டை முனையில் வாகு பார்த்து தொங்கவிடப்பட்டிருந்த பர்மாப் பையி ல் கை விட்டுத் துழாவினான். அப்போது, அந்தப் பையை பர்மா பஜாரில் வாங்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி வெற்றி பெற்ற மல்லிகாவின் செயலை எண்ணிக்கொண்டான் அவன். கையை எடுத்து, சிகரெட்டுப் பெட்டி ஒன்றையும் எடுத்தான். ஆனால், பெட்டி காலியாக இருந்தது. அவனது உள் மனத்திற்குக் கிட்டிய நிதர்சனத் திருட்டாந்தமோ ?

காலியாகக் காணப்பட்ட கட்டிலை அடைந்த சிவஞானம் அதையே வெறிக்கப் பார்வையிட்டான். விரக்தியுடன் நெடுமூச்செறிந்தான். துணை இருந்தவள், துணையை விட்டு விட்டு, துணையின்றிச்சென்றுவிட்ட கதை, பரிதாபம் குழைத்து, அவனது மனிதாபிமானம் மலிந்த மனிதத் தன்மையின் மன இயக்கத்தை அணைத்தது. நின்றவன், பெருமூச்சை நிற்க வொட்டாதவனாக, ஏறித் தாழ்ந்த நெஞ்சத்துடன் மெத்தையில் சாய்ந்தான். பஞ்சு மெத்தை நெருஞ்சி முள்ளெனக் குத்தியது. தலையணையை நகர்த்தித் தலைக்கு அணை கொடுத்தான். தலைவலியை அமர்த்தியடக்கக் கையாண்ட உபாயமாக அச் செயல் இருக்கக் கூடும்.

குழந்தையின் பக்கம் தாவித் தாவி மீண்டன அவனது கருவண்டுக் கண்கள்.

குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. அந்நிலையிலும் அதன் பிஞ்சுக் கரங்கள் அதன் அருகிருந்த காலி இடத்தைத் தடவியவாறு இருந்தன. பாவம், அன்னையின்