பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பாலமுதத்தைப் பருகத்தான் அக்கரங்கள் அவ்வாறு தடவிக் கொண்டிருந்தன !

சிவஞானத்திற்குப் பொட்டில் அறை விழுந்த மாதிரி இருந்தது. ‘தெய்வமே, நீ என்னைச் சோதித்ததோடு இந்தக் குழந்தைத் தெய்வத்தையும் அல்லவா சோதித்துவிட்டாய் ! ஐயையோ, தெய்வமே ! ஐயோ ராஜா ! ஐயோ மல்லிகா ! உந்திக்கமலத்தில் பிறந்த சலனம், அவனது அங்கங்கள் ஒவ்வொன்றையும் நிலை குலையச் செய்தது. வழிந்த சுடுநீரை வழித்துவிடக்கூடச் சிந்தையற்று, சிலை நிலையில் அமர்ந்திருந்தான். ‘சடக்’ என்று அவன் எழுந்து, பையிலிருந்த பாலூட்டும் சீசாவை எடுத்துச் சுத்தப்படுத்தினான். பால் சப்பும் ரப்பரைக் கழுவினான். பிளாஸ்கில் இருந்த பாலை எவர்சில்வர் டம்ளரிலும் டபராவிலும் ஊற்றினான் ; ஜீனி தூவினான்; ஆற்றினான்; நுனி விரலில் துளி எடுத்து நாக்கின் நுனியில் வைத்துச் சுவை பார்த்தான். இன்னும் துளி ஜீனித்துகள்களைத் தெளித்தான் ; ஆற்றினான்; வடி கட்டும் துணியைத் தேடி எடுத்தான். சொட்டுப்பாலை எடுத்துத் தரையில் வைத்துப் பார்த்தான். நீர் மூன்று பங்கும் பால் ஒரு பங்குமாகத்தான் ஆறு மாதச் சிசுவுக்குக் கொடுக்க வேண்டுமென்னும் டாக்டரின் கட்டளையை அவன் மறந்துவிட மாட்டான். நிம்மதியடைந்த மனத்துடன் வடி கட்டினான். சீராகவும் நிதானமாகவும் சீசாவில் ஊற்றி, ரப்பரைச் செருகினான். குழந்தைக்குப் புகட்டினான் பாலை. அது ஆவல் துள்ள பாலருந்தியது. பாதி முடிந்ததும் இருமியது. தொண்டைக் குழியில் தடவிக்கொடுத்தான். மறு பகுதியைக் கொடுத்தான். செல்லவில்லை. சீசாவை வைத்தான். அதற்குள் சிறுநீர் பெருகியது. துணியை எடுத்து பழைய அசுத்தத்துணியுடன் சேர்த்தான். வேறு புதிய துணிக் கிழிசலைக் குழந்தையின் இடுப்புக்குப் போட்டான். அது அப்படியும் இப்படியும் புரண்டது. குஞ்சுத் தலைமயிரை நீவிக் கொடுத்தவண்ணம், வண்ணப் பொற்சிலையை உறக்கப்படுத்தினான். அவனுக்குக் கொட்டாவி வந்தது. மண்டை வலி வேறு சேர்ந்துகொண்டது. மல்லிகா நிழலாடிய நெஞ்சுடன் அவன் குழந்தையை ஊடுருவிப் பார்த்தான். அது தூங்கி