பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

அவன் சொற்கள் அவருக்குப் பாலை வார்த்தன.

ஆனால், இப்போது ஏன் அவர் நெஞ்சம் அப்படித் தவிக்கிறது ?

ஞானபண்டிதன் தன் தந்தையை நோக்கனான் : ஸ்டெல்லா ஜான்ஸ்னையும் நோக்கினான்.

“அப்பா, இவள் பெயர் ஸ்டெல்லா ஜான்ஸன் ! வாஷிங்க்டன் படிப்பில் எனக்குக் கிடைத்த தோழி. தங்கமான பெண். இவள் தகப்பனார் வாஷிங்க்டன் நாட்டில் ஒரு பெரிய தொழிலதிபர். படிப்பிலும் என்னைப் போலக் கெட்டிக்காரி. என் படிப்பின் உயர்வு கண்டு என் பேரில் ஒரு பிரியம் வைத்திருக்கிறாள். அவ்வளவுதான் !... இவளை நம் வீட்டுக்கு டீ க்கு அழைத்திருக்கிறேன் !” என்று விளக்கமாகச் சொன்னான்.

மகன் முகத்தையே பார்த்திருந்த அவருக்கு, ஏதோ ஒரு வகையான அமைதி கனியத் தொடங்கியது. “அப்படியா ? ரொம்பவும் சந்தோஷம், தம்பி !” என்று மகிழ்ந்தார். மகனை அன்புடன் ‘தம்பி’ என்று அழைத்து ஆனந்தப்பட்டு வரும் அதே பான்மையின் மாற்று, ரவையும் மாறாமல் அழைத்தார். பிறகு, விருந்தாளியை டீக்கு வரும்படி தம் பங்கிலும் அழைத்தார். நாகரிகமான போக்கின் விதியும் அதுவேதானே ?

அவளும் ‘ஓ. கே.’ சொன்னாள்.

கார் விரைந்தது.

தொடர்ந்து வந்த ஏதோ ஒரு காரின் சத்தம் கேட்டுத் தற்செயலாகத் திரும்பினார் சோமசேகர்.

அவர் முகம் ஏன் அப்படி பேயறை பட்டது போல அப்படி வெளிறிவிட்டது ?

மொட்டைத்தலையும் முறுக்குமீசையும் திகழ விளங்கிய அந்தப் பயங்கர மனிதன், விஷமப் புன்னகை சொரிந்த வண்ணம், காரை ஒட்டிக்கொண்டே வந்தான். அவன் பார்வை முன்னே லயித்து விட்டிருந்தது. அடுத்த நிமிஷத்தில், அவன் என்ன எண்ணமிட்டானோ, ஏதோ ஒரு தீர்மானத்தை உருவாக்கிக் கொண்டவனைப் போலக் கண்களை உருட்டி விழித்தான். பிறகு, முன்னால் சென்ற ‘ஸ்டாண்டர்ட்’ காரை ஓவர்டேக் செய்யத் தொடங்விட்டான் !