பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கடைதிறப்பின் உட்பொருள்

31


முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனும் இல்லாவி டத்தே
கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின்.[1]

[கொழுநர்-கணவர் ; கல்-மேலாடை ; நீவி-விலக்கி]

என்று காட்டுகிறார்.

அழகிய மங்கை ஒருத்தி காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஒலிக்குமாறு ஒய்யார நடை போட்டுக் கொண்டு நடந்து வருகின்றாள். அவள் கொங்கை பாரத்தை அவள் நுண்ணிய இடை தாங்க முடியாது போகும் என்று சிலம்புகள் எண்ணி " அபயம், அபயம்” என்று ஒலிக்கின்றன என்று கவிஞர் காட்டுகின்றார்.

உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை
ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு
அபயம் அபயமென அலற நடைபயிலும்
அரிவை மீர்கடைகள் திறமினோ.[2]

என்ற தாழிசையைப் படித்துப் படித்துச் சுவைக்க. இயல்பாக எழும் சிலம்பு ஒலிக்கு கற்பனைத் திறத்தால் கவிஞர் புதுப்பொருள் கற்பித்துச் சிறப்பிக்கும் திறனை எண்ணி மகிழ்க. தாயுமான அடிகளும் இத் தாழிசையின் கருத்தை அடியொற்றி அப்படியே,

மின்போலும் இடைஒடியும்
ஒடியுமென மொழிதல்போல்
மென்சிலம்பு ஒலிகள்ஆர்ப்ப
வீங்கிப் புடைத்துவிழு
சுமையன்ன கொங்கைமட
மின்னார்கள்.[3]


  1. தாழிசை-47
  2. தாழிசை-58,
  3. தாயுமானவர்:தேசோமயானந்தம்-செய். 10,