பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25



தொண்டை நாட்டையும், சோணாட்டோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையோடு இறந்து போனான் தந்தை என உணர்ந்து, அதை நிறைவேற்றுவது தன் தலையாய கடமையாகக் கொண்டு, இராஷ்டிர கூடத் தண்டத் தலைவர்கள் பலரோடு, பல்வேறு இடங்களில் பலமுறை போரிட்டுத் தந்தை விரும்பியதை முடித்துத் தந்தான். வடநாட்டில் வெற்றி கண்ட பராந்தகன், பின்னர் பாண்டி நாட்டின்மீது படை தொடுத்தான். அன்று பாராண்டிருந்த பாண்டியன் இயல்பாகவே ஆற்றலில் சிறந்திருந்ததோடு, ஈழநாட்டரசர் துணையையும் பெற்றிருந்தான். அதனால், அவனை ஒரே போரில் வெற்றி கொள்வது பராந்தகனால் இயலாது போயிற்று; ஆயினும் எடுத்த வினையைக் கைவிடக் கருதினானல்லன். பாண்டியனோடு பலமுறை போரிட்டான். அவனுக்குத் துணை வந்த ஈழப் படையை அழித்தான்; ஈழப் படையின் துணை, மீண்டும பாண்டியனுக்கு வாரா வண்ணம் செய்தற் பொருட்டுக் கடல் கடந்து சென்று, அவரோடு அவர் நாட்டிலேயே போரிட்டு மீண்டான். இறுதியில் பாண்டியன் மாண்டான்; பாண்டிநாடு பணிந்து விட்டது; ஆனால், அப்பெருநாட்டைத் தன் நாட்டோடு இணைத்துக் கொள்ளப் பராந்தகன் விரும்பினானல்லன்; அதை அடக்கி ஆளவல்ல பெரும்படை இன்மையாலோ, அவ்வாறு ஆள்வது தன் ஆட்சிக்குத் துணையாகாது எனக் கருதியதாலோ, அந்நாட்டில் வெற்றி கண்டதோடு அமைதியுற்றான்.

பராந்தகனுக்கு மனைவியர் இருவர்; அவருள் ஒருத்தி மலையமானாட்டுச் சிற்றரசன் மகளாய வானவன் மாதேவியாராவர்; அவள் வயிற்றிற் பிறந்த மக்கள் மூவர்; ஆதித்த கரிகாலன், அருண்மொழித்தேவன், குந்தவை இவர்களே அவர்கள். இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்ற ஆதித்த கரிகாலன் வஞ்சகர் சிலரால் கொல்லப்பட்டான்; அருண்மொழித்தேவனே, பின்னர் இராச இராசன் எனும்