பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47



கொள்ளுதல் வேண்டும் எனும் வேட்கையுடையோராகிய சோழர்குல வேந்தன், இராசாதிராசனுக்குச் சாளுக்கியரின் இச்சிறு செயல் சினத்தியை மூட்டிவிட்டது. அவ்வளவே; சிறிதும் காலங்கடத்தாது, துங்கபத்திரை ஆற்றைக் கடந்து விட்டான், சாளுக்கிய ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர் பலரை வென்று துரத்திவிட்டு, அவர் ஆண்ட நாடுகளில் தன் ஆணை நடைபெறப் பண்ணி னான்; சாளுக்கியர்பால் அவன் கொண்ட சினம் அந்த அடிவோடு அமைதியுற்றிலது, சாளுக்கிய மன்னர்களின் வாழிடமாகிய கம்பிலிநகரை அடைந்து ஆங்குள்ள அம் மன்னர் மாளிகைகள் அனைத்தையும் இடித்துப்பாழ் செய்துவிட்டு, அந்நகர் நடுவே, ஆங்குத் தான் பெற்ற வெற்றியை எக்காலத்தவரும் எந்நாட்டவரும் உணர்தல் வேண்டும் என்ற விழைவால், வெற்றித் துரண் ஒன்றை நாட்டிவிட்டு வந்து சேர்ந்தான். -

தன் பேரரசின் வடவெல்லையில், இடைவிடாது குறும்பு புரியும் ஒரு பேரரசை வாழவிடுவது, தன் அரச வாழ்விற்கு அரண வரிப்பதாகாது என்ற உண்மையை உணர்ந்த இராசாதிராசன், அவ்வரசின் வலியழிக்கும் செயலை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் துணிந்தான் அதைக் குறைவறச் செய்து முடிக்கவல்ல பெரும்படை துணைசெய்யத் தலைநகர் விட்டுப் புறப்பட்டான்; கம்பிலிப்போர் முடிந்து இரண்டாண்டுகள் கழிவதற்கு முன்பே, சோழர்படை சாளுக்கிய நாட்டில் மீண்டும் புகுந்துவிட்டது. இம்முறை சோழர் படை துங்க பத்திரை ஆற்றங்கரையோடு நின்று விடவில்லை: சாளுக்கிய அரசு நிலவும் அகநாட்டில் நெடிது சென்று, கிருஷ்ணை ஆற்றங்கரையை அனுகிவிட்டது. அவ்வாற்றங்கரை நகராகிய பூண்டுரில் பாடிக்கொண்டிருந்த சாளுக்கியப் படைத்தலைவர் அறுவரையும் அவர்க்குத் தலைமை தாங்கி நின்ற பெரும்படைத் தலைவனாகிய விச்சையன் என்பானையும் வென்று, அவன் தாய்-தந்தை