பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49



துணை வந்த மன்னன் ஒருவனும் மாண்டு போனான். சாளுக்கியப் பேரரசின் தலைநகராம் பெருமைமிக்க கல்யாணபுரம் சோழர் கைப்பட்டது. இராசாதிராசன், அந்நகர் நடுவே அமைந்திருந்த அரண்மனையை அறவே அழித்துவிட்டு, ஆங்குத் தான் பெற்ற வெற்றிக்கு அறிகுறி யாக, அந்நகரிலேயே வீராபிஷேகம் செய்து கொண்டான்; விசயராசேந்திரன் என்ற பட்டத்தையும் குட்டிக் கொண்டான்.

கல்யாணபுர வெற்றிக்குப் பின்னர் எட்டாண்டுகள் கழிந்தது. இராசாதிராசன், மேலைச்சாளுக்கியரோடு மீண்டும் போர்தொடுத்தெழ வேண்டிய நிலைவந்துற்றது. சோழர்கள் சாளுக்கியர்க்கு விளைத்த இழிவை எண்ணி எண்ணித் துன்புற்ற ஆகவமல்லன், அச்சோழரை என்றேனும் ஒருநாள் எவ்வாறேனும் வென்று பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று துணிந்தான்; இந்த எட்டாண்டு காலத்தில், தன் படையை அதற்கேற்ற வகையில் பெருக்கினான்; பிறநாட்டு அரசர்களின் துணையை வேண்டிப் பெற்றான்; ஆகவமல்லன் செய்யும் முன்னேற்பாடுகளை அறிந்தான் சோழ மன்னன் இராசாதிராசன்; மேலும் காலம் தாழ்த்தின் அவன் கை வலுத்துவிடும்; ஆகவே அவன் படைபலம் மேலும் பெருகாத முன்பே அவனை அழித்து விடவேண்டும் எனத் திட்டமிட்டான்; இராசாதிராசன் ஆண்டும் முதிர்ந்துவிட்டது; தன் வாழ்நாள் முழுவதும் ஒயாப்போர் மேற்கொண்டு அலைந்ததால், அவன் உடலும் தளர்ந்திருந்தது. விரைந்து சென்று வீழ்த்தி விடவேண்டும் என்ற நினைவால், பெரும் படையைத் திரட்டிக் காலத்தைக் கழிக்க அவன் விரும்பவில்லை. அதனால் உள்ள படையோடு உடனே புறப்பட்டுக் கிருஷ்ணை ஆற்றங்கரையை அடைந்து விட்டான்; அவ்வாற்றங்கரைப் பேரூர்களில் ஒன்றாகிய கொப்பத்தில் போர் தொடங்கிவிட்டது. இம்முறை இராசாதிராசனே படைத் தலைமையேற்று, பட்டத்து யானைமீது ஏறிப்

க-4