பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55



குலப் பேரரசனுமாகிய இராசராசனின் பரந்தகன்ற அரசியல் அறிவின் பயனாய் ஏற்பட்ட வேங்கி நாட்டுத் தொடர்பு விட்டுப் போவதை, வீரராசேந்திரன் விணே பார்த்துத் கொண்டிருப்பனோ? சோணாட்டு வட வெல்லைக் காப்பிற்கு வேங்கி நாட்டுறவு, எத்துணை இன்றியமையாதது என்பதை உணர்ந்தவனாதலின், வீர ராசேந்திரனும் வேங்கிநாடு நோக்கி விரைந்தான்; சென்று தாக்கும் போரினும் நின்ற தாக்கும் போரிலேயே கருத்து அதிகமாம் ஆதலின், சோழர் படை பேராற்றல் காட்டிப் போரிட்டது சாளுக்கிய தண்ட நாயகன் வேங்கி நாட்டுக் களத்தில் மாண்டு வீழ்ந்தான். வீரராசேந்திரன் வெற்றிகொண்டான், வேங்கி நாட்டுறவை அசைக்க முடியாத தாக்கி அம்மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.

வீரராசேந்திரன் வீடு திரும்பினான் என்றாலும், ஆகவமல்லன் ஆசை அடங்கினானல்லன். சோழர் படையைத், துங்கபத்திரையாற்றை விட்டுத் துரத்தும்வரை அவன் கண்கள் துங்கா வாயின. அதனால், மீண்டும் ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். கிருஷ்ணையும் துங்கபத்திரையும் கூடும் இடமாகிய கூடல் சங்கமத்தில் சோழர் படையை எதிர்த்துப் போரிட்டான்; இம்முறை ஆகவமல்லன் மக்கள இருவரும் தந்தைக்குத் துணையாக வந்திருந்தனர்; பெரும்போர் நடைபெற்றது; முடிவில் ஆகவமல்லன் படைத் தலைவர் அறுவர் கொல்லப்பட்டனர்; அவன் மக்கள் இருவரும் எங்கோ ஒடி ஒளிந்து கொண்டனர், ஆகவமல்லனும் புறங்காட்டினான். வீரராசேந்திரன், ஆகவமல்லன் அரணை வளைத்துக்கொண்டு அவன் மனைவியரையும், புட்பகப்பிடி என்னும் பெயர்பூண்ட பட்டத்து யானை யையும், வராகக் கொடியையும், எண்ணற்ற களிறுகளையும், குதிரைகளையும், கணக்கற்ற பொருள்களையும் கைப்பற்றிக் கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் அடைந்து வெற்றி விழாக் கொண்டாடினான்.