பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இன்றைய கஞ்சம் விசாகப்பட்டின மாவட்டங்களைக் கொண்டதுமாகிய ஆந்திர மாகாணப் பகுதி தென் கலிங்கம் எனவும், மகா நதிக்கும் கங்கைக்கும் இடையில் உள்ளதும், ஒரிசா மாகாணம் என வழங்கப் பெறுவது மாகிய பகுதி வட கலிங்கம் எனவும் இரு கூறாய்ப் பிரிந்து வழங்கப் பெற்றது.

கலிங்கத்தை வென்ற காவலர் இருவர். ஒருவன் வட நாடாண்ட மௌரியப் பேரரசனாகிய அசோகன், மற்றொருவன் தென்னாடாண்ட சோழர்குலப் பேரரசனாகிய குலோத்துங்கன். அசோகன் வென்றது தென் கலிங்கம்; குலோத்துங்கன் வென்றது. வட கலிங்கம். அசோகன் வட நாட்டு வேந்தன்; குலோத்துங்கன் தென்னாட்டுக் காவலன். முன்னவன் மௌரியர் வழி வந்தவன்; பின்னவன் சோழ சாளுக்கியர் வழி வந்தவன். அசோகன் வாழ்ந்த காலத்திற்குப் பின் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்தவன் குலோத்துங்கன்.

இவ்வாறு அவ்விருவர்க்குமிடையே வேற்றுமை பல விளங்கினும், அவ்விருவரையும் ஒருங்குவைத்துக் காண, வல்ல ஒற்றுமைப் பண்புகள் சிலவும் அவரிடையே உள. இருவரும் கலிங்கத்தை வென்றவர்கள். அவர்கள், கலிங்கத்தின் வேறு வேறு பகுதிகளை வேறு வேறு காலத்தில் வென்றனர் என்றாலும், அவரால் வெல்லப்பட்டது கலிங்கம் என்ற பொதுப்பெயர் பூண்ட ஒரே நாடாகும். இருவரும் மணிமகுடம் புனைந்து மன்னர் ஆவதற்கு முன்னர், இளங்கோப் பட்டம் பூண்டு, போர் வேட்கை மேற்கொண்டு நாடெங்கும் அலைந்து திரிந்தவராவர். தம் ஆட்சி உரிமையைப் பெற, நாட்டில் அரசியல் குழப்பத்தைத் தோற்றுவித்து, ஆட்சிக்கு முறைப்படி உரிமையுடையாரைக் கொலை புரிந்தவர் என்ற பெரும்பழி அவ்விருவர்க்குமே சூட்டப்பட்டுள்ளது. இருவருமே பாராட்டத்தக்க பேராண்மையும் பெரும் படையும் உடையவர். இருவருமே தம் ஆட்சியின் பிற்பகுதியை நாட்டு மக்களின்