9
நூல் ஒருவரால் செய்யப்பட்டதன்று என்பதை மெய்ப்பிக்குமன்றோ?
3. "(நெய்தற்கலியில் உள்ள) செய்யுளை ஆசிரியர் நல்லந்துவனார் செய்தார்; முறைப்படியே கோத்தார்" என வரும் நச்சினார்கினியர் கூற்று கவனித்தற்குரியது. நெய்தற்கலியில் மட்டும் நல்லந்துவனார் பெயர் குறிப்பிட்ட உரையாசிரியர் ஏனைக் கலிகளில் கூறாமையும், 'கோத்தார்' எனக் கூறலும், கலித்தொகைச் செய்யுட்கள், ஒருவர் செய்தன அல்ல-நல்லத்துவனாரே பாடியனை அல்ல-என்பவற்றை நன்கு விளக்குவனவாகும். அனைத்தும் பாடியவர் நல்லந்துவனாரே எனின், கோத்தார் எனல் பொருத்தம் அன்றே!
4. ஒரு கலியுள் ஒரே துறையில்-ஒரே பொருள் பற்றிப் பல பாக்கள் ஒருவரே பாடியிருத்தல் இயலாது. இங்ஙனம் ஒவ்வொரு கலியிலும் கூறியது கூறல் ஒரே ஆசிரியரால் ஏற்படத்தக்கதும் அன்று. இக்குற்றம் பண்டைத் தமிழ்ப் புலவர்பால் ஏற்றிக் கூறல் அடாது.
5. ஒவ்வொரு கலியினும் இரண்டோர் இடங்களில் பாண்டியன் எனவும், வையை எனவும், கூடல் எனவும் வருதல் கொண்டு செய்யுட்கள் அனைத்தும் ஒருவர் பாடியனவே[1] என்பது பொருந்தா முடிபாகும். என்னை? சிலப்பதிகாரத்துள் வந்துள்ள அடிகள் பல கருத்துக்கள் பல-அங்ஙனமே மணிமேகலையும் பயிலக் காண்கிறோம் மற்றும் 'ஊதுலைக் குருகின்' என்பது போன்ற பல தொடர்களும், ஒன்றுபட்ட கருத்துக்கள் பலவும் சங்கப்புலவர் பலருடைய பாடல்களில் பயின்று வரக்காண்கின்றோம். இவை கொண்டு அப்பாடல்கள் அனைத்தும் ஒரு புலவரே பாடினார் எனக் கோடல் தகுதியாமோ?
'பாடியவர் ஒருவர் அல்லர்' என்பதற்கு மேலும் சில காரணங்களை ஆராய்ச்சியாளர் காட்டுவர்[2]. விரிவஞ்சி அவற்றைக் கூறாது விடுத்து, ஆசிரியர் ஒருவர் அல்லர் என்பதை மீட்டும் வற்புறுத்தி மேற்செல்வாம்.
கவித்தொகை ஆசிரியர் ‘பலர்' ஆவர்:
கலித்தொகை ஆசிரியர் 'ஒருவர் அல்லர்-ஐவரும் அல்லர்' என்ற முடிபானே. 'பலர் ஆவர்' என்னும் முடிபுதானே போதரும். எனினும், மேலும் இரண்டொரு காரணம் காட்டுதும்.