பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மீட்டர்

102

அம்மை

ஆனால் மின்னோட்டத்தை அளவிடச் சுற்றோடு தொடராக மானியை இணைக்கவேண்டும். இதனால் அளவிடப்படும் மின்னோட்டம் பாதிக்கப்படாமல் இருக்க, மானியின்

அம்மீட்டர்


உதவி : சென்கோ, சிகாகோ

மின் தடை குறைவாக இருக்க வேண்டும். ஆகையால் அம்மீட்டரின் மின்தடை குறைவாக இருக்குமாறு அமைக்கப்படுகிறது. மின்மட்டத்தை அளவிட, எந்த இரு இடங்களுக்கிடையேயுள்ள மின் மட்டத்தை அளவிட வேண்டுமோ, அவ்விரண்டிற்கும் இணையாக மானி இணைக்கப்படும். இதனால் சுற்றின் நிலை பாதிக்கப்படாதிருக்க, மானியில் மிகக் குறைந்த மின்னோட்டமே பாயவேண்டும். ஆகையால் அதன் மின்தடை அதிகமா யிருக்குமாறு அமைக்கப்படும். இக்காரணத்தால் வோல்ட் மீட்டரின் தடை அதிகமாக இருக்குமாறு அமைக்கப்படும்.

இயங்கு சுருள் கருவிகள் (Moving coil instruments) : இக்காலத்தில் இவ்வகைக் கருவிகளே அதிகமாக வழங்குகின்றன. சாதாரண மின்னோட்ட மானியின் அமைப்பையே இதுவும் உடையது.

இயங்கு சுருள் அம்மீட்டர்

இதிலுள்ள சுருள் உறுதியான வச்சிர முனைகளில் பொருத்தப்பட்டு இயங்குகிறது. சுருளுடன் பொருத்தப்பட்ட முள்ளொன்று ஓர் அளவையின் மேல் நகர்ந்து, அதன் விலக்கத்தைக் காட்டும். இதன் அளவை ஆம்பியர்களிலோ வோல்ட்டுகளிலோ குறிக்கப்பட்டிருப்பதால், இதைக் கொண்டு நேரடியான அளவுகளைச் செய்ய முடிகிறது. சுருளின் விலக்கத்தைக் கட்டுப்படுத்த, மெல்லிய வில்லொன்று இருக்கும். மிக உறுதியாகவும் நுணுக்கமுள்ளதாகவும் இக்கருவியை அமைக்கலாம். ஆகையால் இது பல துறைகளில் பயன்படுகிறது. ஆனால் இவ்வகை மானியில் ஒரு குறையுண்டு. இது மாறு மின்னோட்ட அளவுகளிற் பயன்படாது.

தேனிரும்புக் கருவிகள் : மின்சாரம் பாயும் கம்பிச் சுருளின் அருகே ஒரு தேனிரும்புத் துண்டு வைக்கப்பட்டால், அதில் காந்தத்துவம் தூண்டப்பட்டு, அது சுருளால் விலக்கப்படுகிறது. இவ்வியக்கத்தைப் பெரிதாக்கி, அதிலிருந்து மின்னளவுகளைச் செய்யலாம். இதுவே தேனிரும்பு மானிகளின் தத்துவம்.

பொதுவாக வழங்கும் மானியில் இரு தேனிரும்புக் கருவிகள் இணையாக அருகருகே அமைந்திருக்கும். அவற்றுள் ஒன்று நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். இன்னொன்று இயங்கி, அத்துடனுள்ள ஒரு முள்ளையும் இயக்கவல்லது. இவ்விரு கம்பிகளும் சுருளின் அச்சிற்கு இணையாக இருக்கும். சுருளில் மின்சாரம் பாய்ந்தால் இரு கம்பிகளும் காந்தங்களாகின்றன. இதனால் அவற்றிடையே விலக்கம் தோன்றி, இயங்கும் கம்பி விலகுகிறது.

தேனிரும்பு அம்மீட்டர்

இவ்விலக்கத்தைக் காட்டும் அளவை மின்னோட்டத்தை அளவிடுகிறது.

இக்கருவி மிக எளிய அமைப்புக் கொண்டது. இது மலிவானது. ஆனால் இதில் பல பிழைகள் நேர வழியுண்டு. ஆகையால் திருத்தமான அளவுக்கு இது பயன்படாமல் இருந்தது. ஆனால் தற்காலத்தில் வழங்கும் புதுவகைக் காந்தவியற் கலவைகளை இக்கருவியில் பயன் படுத்துவதால், இப்பிழைகளைத் தவிர்த்து, மிகத் திருத்தமான கருவியாகச் செய்யலாம்.

அம்மூவனார் சங்கமருவிய புலவர்; சேரனாலும், பாண்டியனாலும், திருக்கோவலூர்க் காரியாலும் ஆதரிக்கப் பெற்றவர். மேலைக் கடற்கரையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடல்கள் நற்றிணையில் பத்தும் (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397), குறுந்தொகையில் பதினொன்றும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), ஐங்குறு நூற்றில் நெய்தல்பாட்டு நூறும், அகநானூற்றில் ஆறும் (10, 35, 140, 280, 370, 390) கிடைத்துள. இவர் பெயர் அம்மூவன் என்றும் குறுந்தொகையிற் காணப்படுகிறது.

அம்மெய்யன் நாகனார் இவர் இயற்பெயர் நாகன். அம்மெய்யன் என்பது இவர் தந்தை பெயர் போலும் (நற்.252).

அம்மை (Pox) : தொற்று நோய்களில் அம்மை நோய்கள் ஒரு தனிப்பட்ட வகையைச் சேர்ந்தவை. தொற்று ஏற்பட்டுச் சில நாட்களுக்குப் பிறகு, அதாவது அவயக் காலத்திற்குப் (Incubation period) பிறகு, காய்ச்சலும், அதற்குச் சில நாட்களுக்குப் பின் உடம்பில் தோலின் மேலும், வாய், மூக்கு, கண் இவைகளின் சவ்வுகளின் மேலும், சிறு சிவப்புப் புள்ளிகள் தோன்றிப் பின் அவை நீர்க் கொப்புளங்களாகவோ சீழ்க் கொப்புளங்களாகவோ மாறிப் பிறகு சில நாட்களுக்குள் இந்தக் கொப்புளங்கள் அடங்கிக் காய்ந்து, பொருக்குகளாகி உதிர்ந்துவிடும். சிவப்புப் புள்ளிகளும், தடிப்புக்களும், படைகளும், கொப்புளங்களும் உண்டாகும். இந்த நோய்கள் மாரி அல்லது சீதளாதேவி என்னும் தெய்வத்தால் ஏற்படுபவை என்னும் நம்பிக்கையால், இவற்றிற்கு அம்மை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

அம்மை வகைகள்: 1. சின்ன அம்மை (Chicken pox): இதை நீர்க் கொளுவான் என்பார்கள். இந்த அம்மை கடுமையானதன்று. கொப்புளங்கள் சாதாரணமாகச் சீழ் பிடிப்பதில்லை. ஆகையால் இதனால் மரணம் ஏற்படுவதில்லை. 2. பெரியம்மை (Small pox) மிகவும் கடுமையானது; உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பதுண்டு. இதில் காணும் கொப்புளங்கள் சீழ் பிடிப்பதால் அதிகக் காய்ச்சலும், அவை வாய், கண், மூக்குகளில் உண்டாவதால் ஆபத்தும் ஏற்படுகின்றன. நோயினின்று தப்பிப் பிழைத்தாலும், தழும்புகள் முக்கியமாக முகத்தில் உண்டாகி விடுவதால், விகார ரூபத்தைக் கொடுத்துவிடுகிறது. கண்ணில் கொப்புளம் புறப்பட்டால், புண்ணாகி, அது ஆறின பிறகு குருடாகிவிடுகிறது. இதைத்தான். பூ விழுந்துவிட்டது என்பார்கள். 3. தட்டம்மை