அம்மைச்சி
104
அமராந்தேசீ
வேண்டிய சமயத்தில் குழந்தையோ ஆளோ குத்துவதற்கு ஏற்ற உடல் நலமில்லாதிருந்தால் .உடல் நலம் பெற்ற பின்னரே அம்மை குத்தப் பெறுவர். ஊரில் பெரியம்மைத் தொற்று நோய் பரவியிருப்பதாகக் கண்டால் நகராண்மைத் தலைவர் அம்மை குத்தி நான்கு ஆண்டுகளான மக்கள் அனைவரும் அம்மை குத்தி கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுவர்.அம்மை குத்துபவர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் வந்து அம்மை குத்திய இடத்தைக் காட்டும்படி கூறுவர்.அப்படிக் காட்டும்போது அம்மை குத்தியது பயனுறவில்லை என்று கண்டால்,மறுபடியும் அம்மை குத்துவர். இப்படி மூன்று முறை குத்தியும் பயனுறவில்லை என்று கண்டால்,இவர்க்கு அம்மை குத்தல் ஏற்காது என்று கடிதம் எழுதிக் கொடுப்பர்.அம்மை குத்திக் கொள்வதற்குக் கட்டணம் கிடையாது.கேட்டுக் கொண்டால்,வீட்டில் வந்தும் அம்மை குத்தி வைப்பார்.அம்மை குத்தல் பற்றிய விதிகளை மீறி நடந்தால் அபராத தண்டனை உண்டு.
அம்மைச்சி (17 ஆம் நூ.) வருணகுலாதித்தன் மடல் பாடிய அம்மையார். அந்தக்கவி வீரராகவ முதலியார் சந்திரவாணன் கோவையை அரங்கேற்றும்போது ஒரு பாட்டுக்குத் தடை கூறியவர் என்பர்.
அம்மொனைட்டுகள் நாட்டிலஸ் போன்ற
மெல்லுடற் பிராணிகள். இவை இப்போது இல்லை. பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்தன. இடைப்பிராணியுகத்தில் (Mesozoic period) இவை எண்ணிக்கையிலும் வகையிலும் ஏராளமாக இருந்தன. இவற்றின் பாசில்களை அந்தக் காலத்துப் பாறைகளிலே பல தேசங்களிலே காணலாம். இவற்றின் கூடுகள் ஒரே மட்டத்திலிருக்கும் சுருளாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கூட்டிலும் அறையறையாகத் தடுத்திருக்கும் இவை பாசில்களாவதற்கு மிகவும் ஏற்றவையாக இருந்ததால், எண்ணிறந்த அளவில் இவை கிடைக்கின்றன. இடைப்பிராணியுகத்தின் திரையாசிக, ஜுராசிக கிரிப்டேஷஸ் என்னும் மூன்று பிரிவுகளிலும் இவை வியாபித்திருந்தன. அந்தக் காலத்தைப் பல அடுக்குகளாக (zones) பிரிப்பதற்கு இந்தப் பாசில்கள் பெரிதும் பயன்படுகின்றன. மானிட இயலார் மட்கலங்கள் உடைந்த ஓட்டைக் கொண்டு எவ்வாறு மனிதனுடைய நாகரிகக் காலப் பிரிவுகளை அறிந்து கொள்ளுகின்றனரோ, அவ்வாறு தொல்லுயிரியலார் அம்மொனைட்டுகளைக் கொண்டு இடைப் பிராணியுகத்தின் பிரிவுகளை அறிந்து கொள்ளுகின்றனர். இவை காலத்தைக் குறிக்கும் அடையாளங்களாக உதவுகின்றன. இந்தியாவிலும் அம்மொனைட்டுகள் அகப்படுகின்றன. திருச்சிராப்பள்ளிக்கருகில் கிரிட்டேஷஸ் காலத்துக் கற்களில் இவை அகப்படுகின்றன. கண்டகி நதிக்கரையில் அகப்படும் சாளக்கிராமம் என்னும் சிலையும் ஒரு அம்மொனைட்டுதான்.
அமர்நீதி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர்; சோழ நாட்டில் பழையாறையிலிருந்த வணிகர். சிவனடியார் தந்த கோவணத்துக்கு நிறையாக தம் மனைவியோடும் மகனோடும் துலை புக்கு அர்ப்பித்து முத்தி பெற்றவர்.
அமரநாத்: இது அம்பர்நாத் (வானத்தின் தலைவன்) என்பதன் சிதைவு. பம்பாய் இராச்சியத்தில் தானா மாவட்டத்தின் கல்யாண் தாலுகாவில் பம்பாயிலிருந்து 38 வது மைலிலுள்ள ஊர் சிவன் கோவில் பண்டைய சிற்பச் சிறப்புகளுடையது. மேற்கு பார்த்த வாயிலுடையது. இங்குள்ளவற்றிற்கு இணையான சிற்பங்கள் பம்பாய் இராச்சியத்தில் வேறு எங்கும் கிடையா.
அமராந்தேசீ கீரைத் தண்டுக் குடும்பம். இந்தக் குடும்பத்தில் பல செடிகள் இலைக்கறியாகப் பயன்படுகின்றன. சில மருந்துக்குதவும், மற்றுஞ் சில அழகிய பூக்கதிர்களுள்ளவை. இவற்றில் பெரும்பாலானவை சிறு செடிகள். சில குற்றுச் செடிகளும் சில கொடிகளும்
உண்டு. இலைகள் மாறொழுங்கு அல்லது எதிரொழுங்குள்ள தனியிலைகள். இலையடிச் செதிலில்லை.
பூக்கள் மிகச் சிறியவை. சாதாரணமாக இரு பாலின. இவற்றோடு ஒருபாற் பூக்களும் மலர்ந்திருக்கும். சில வகைகள் ஈரகச் (Dioecious) செடிகள். மஞ்சரி