பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

114

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விமானப் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. அ. ஐ. நாடுகளுக்குப் பட்டு (ஜப்பான், சீனா), தேயிலை (ஜப்பான், இந்தியா), சணல், தோல் (இந்தியா), ரப்பர், வெள்ளீயம் (மலேயா), கம்பளியிழை (ஆஸ்திரேலியா), காகிதம் (கானடா), சுகபோகப் பொருள்கள் (ஐரோப்பா) முதலியவை இறக்குமதி யாகின்றன. பருத்தி, புகையிலை, கார்கள், எஃகு செய் பொருள்கள் முதலியவை விசேடமாக ஏற்றுமதியாகின்றன. ஏ. சீ.

வரலாறு : 17-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் பிரெஞ்சு, ஸ்பானிய, ஆங்கிலேய, சுவீடிஷ், டச்சு மக்கள் ஏற்படுத்திய குடியேற்றங்களிற் சில பிற்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளாகப் பரிணமித்தன. சுவீடிஷ், டச்சுக் குடியேற்றங்கள் 17ஆம் நாற்றாண்டின் இடைப்பகுதியில் ஆங்கிலேயர்கள் வசமாயின. 1-ம் எலிசபெத் அரசியின் காலத்தில் முதல் முதல் ஆங்கிலக் குடி யேற்றங்கள் அமெரிக்காவில் தோன்றலாயின. சர் ஹம்ப்ரி கில்பர்ட் என்பவர் 1583-ல் நியூபவுண்டுலாந்தில் ஒரு குடியேற்றம் நிறுவ முயன்றது பயனின்றிப் போயிற்று. கில்பர்ட்டின் சகோதரரான சர் வால்ட்டர்ராலி 1584-ல் நியூபவுண்டுலாந்திற்குத் தெற்கே ஏற்படுத்திய குடியேற்றத்தை யொட்டி, 1585-ல்வர் ஜீனியா என்னும் குடியேற்றத்தை நிறுவினார். அமெரிக்கக் குடியேற்றக்காரர்கள் தொடக்கக் காலங்களில் அமெரிக்க ஆதிக்குடிகளான செவ்விந்தியர்களோடு போர் புரிந்து, தங்கள் சூடியேற்றங்களைக் காத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

1-ம் எலிசபெத் காலத்தில் நிரந்தரமான குடியேற்றம் ஒன்றும் நிறுவப் படவில்லையாயினும், 1-ம் ஜேம்ஸ் காலத்தில் அரசனுடைய சாசனம் பெற்று, வர்ஜீனியா கம்பெனி என்று ஒன்று 1606-ல் ஏற்பட்டது. 1609-ல் அக் கம்பெனிக்கு மிகுதியாக அதிகாரம் அளிக்கப்பட்டது. புகையிலை பயிரிடுவதும், கூலிக்கு அடிமைகளை ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதும், அப்பொழுது ஏற்பட்ட பழக்கங்கள். 1619-ல் வர்ஜீனியக் குடியேற்றத்தில் பிரதிநிதி சபையொன்று ஏற்படுத்தப்பட்டது. 1623 லிருந்து அக் கம்பெனியின் சாசனம் மாற்றியமைக்கப்பட்டுக் கவர்னரை நியமிக்கும் அதிகாரத்தை ஆங்கில அரசாங்கமே மேற்கொண்டது. அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் இருந்த அரசியல் முறை இங்கிலாந்தில் இருந்ததைவிட முற்போக்காயிருந்தது. ஏனெனில் 19-ஆம் நூற்றாண்டு வரையில் இங்கிலாந்தில் வாக்குரிமை நிலை திருந்தவில்லை. ஆயினும் குடியேற்றங்களில் முதலிலிருந்தே பெரும்பாலோருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு வந்தது.

1-ம் சார்லஸ் காலத்தில் அவன் மனைவி ஹென்ரிட்டா மேரியா பெயரால் மேரிலாந்து குடியேற்றம் தாபிக்கப்பட்டது. அக்குடியேற்றத்தின் உரிமைகளைச் சர் ஜார்ஜ் கால்வர்ட் என்னும் தனி மனிதருக்கு இங்கிலாந்து மன்னர் அளித்தார்.

17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இங்கிலாந்தில் பியூரிட்டன் சமயப் பற்றுள்ளவர்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. அவர்களிற் பலர் தங்கள் தாய்நாட்டை விட்டுச் சென்று குடியேறுவதென்று தீர்மானித்தனர். 1620-ல் யாத்திரைப் பெரியார்கள் (The Pilgrim Fathers) மே பிளவர் (May-flower) என்னும் கப்பலிற் புறப்பட்டு, வட அமெரிக்காவை யடைந்து, பிளிமத்தில் குடியேறினர். இந்தக் குடியேற்றம் பிறகு மசசூசிட்ஸ் இராச்சியத்தில் அடங்கிவிட்டது.

குடியேறியவர்கள், காடு செறிந்த வட அமெரிக்கப் பிரதேசத்தில் மிகவும் உழைத்துக் காடழித்து நாடாக்கி வேளாண்மைக்குத் தக்கதாக நிலத்தைப் பண்படுத்தி, நிலத்தினால் வரும் வளங்களைப் பெற வேண்டிய நிலையில் இருந்தனர்.

மசசூசிட்ஸ் இராச்சியத்திற்குக் கவர்னரைத் தானே நியமித்துக்கொள்ளும் உரிமையும் பிரதிநிதிசபை ஒன்றும் ஏற்பட்டன. இந்த இராச்சியத்திலிருந்து சிலர் கனெக்டிகட் ஆற்றின் வழியே சென்று, கனெக்டிகட் குடியேற்றத்தை நிறுவினர். மசசூசிட்ஸ் ஆட்சி முறையில் அதிருப்தியடைந்த ரோஜர் வில்லியம்ஸ் ரோடு தீவு (Rhode Island) குடியேற்றத்தை நிறுவினார். அக்குடியேற்றத்தில் பூரண சமயப் பொதுநோக்கு இருந்தது. நியூ ஹாம்ட்ஷயர், மெயின் ஆகிய இரு குடியேற்றங்களும் மசசூசிட்ஸிலிருந்து பிரிந்து ஏற்பட்டவை. மெயினிலிருந்து கனெக்டிகட்வரை இருந்த குடியேற்றங்களுக்கு நியூ இங்கிலாந்து குடியேற்றங்கள் என்று பெயர். இங்குக் குடியேறியவர்கள் கல்வியிலும் தொழில் ஆற்றலிலும் சிறந்தவர்கள். சரிவரப் பயன்படுத்தப்படாத நிலங்களைப் பயிரிட்டுப் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில், சுதேசிகளுடைய பகைமையையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. எல்லைப்புறங்களில் சுதேசிச் செவ்விந்தியர்களுக்கும் குடியேறிய வெள்ளையர்கள் நடந்த பல சண்டைகளில் சுதேசிகள் தோற்றுப் போனதால், அவர்கள் மேலும் மேலும் மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

நியூ இங்கிலாந்து குடியேற்றங்களில் இருந்த வாழ்க்கை முறையும் தென் குடியேற்றங்களில் இருந்த வாழ்க்கை முறையும் வேறுபட்டிருந்தன. நியூ இங்கிலாந்து குடியேற்றங்களுடைய சீதோஷ்ண நிலை ஏறத்தாழ இங்கிலாந்தைப் போலவே இருந்தது. ஆகையால் இங்கிலாந்தில் உற்பத்தியான பொருள்களைவிட அதிகமாக ஒன்றும் அங்கு உற்பத்தியாகவில்லை. ஆனால் வர்ஜீனியாவிலும் மேரிலாந்திலும் புகையிலை முதலிய வெப்பப் பிரதேசத்துப் பயிர்களும் விளைந்தமையாலும் அவ்விளைபொருள்கள் ஐரோப்பாவில் விலைபோயினமையாலும் தென் குடியேற்றங்கள் பொருளாதார முறையில் அதிக இலாபகரமானவையாகக் கருதப்பட்டன.

1641-ல் நியூ இங்கிலாந்து குடியேற்றங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டத்தை அமைத்துக்கொண்டன ; இவ்வமைப்பு 1643-ல் நன்கு வளர்ச்சியுற்றது. மசசூசிட்ஸ், பிளிமத், கனெக்டிகட், நியூ ஹேவன் என்னும் நாடுகள் இதில் சேர்ந்து கொண்டன. ரோடு தீவும் மெயினும் நீக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மசகு சிட்ஸே முக்கியமாக இருந்தது. செவ்விந்திய, பிரெஞ்சுத் தாக்குதல்களை எதிர்க்கவும், இங்கிலாந்தின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் இந்தக் கூட்டம் ஏற்பட்டது. ஆயினும் 17ஆம் நூற்றாண்டிறுதியில் இது கலைந்துவிட்டது.

1621-ல் நிறுவப்பட்ட டச்சு மேற்கிந்தியக் கம்பெனி ஏற்படுத்திய குடியேற்றங்கள், நியூ ஆம்ஸ்டர்டாம், நியூ ஜர்சி, டெலவேர் என்பவை. இக்கம்பெனி முதலில் நிறுவிய குடியேற்றம் ஆரஞ்சுக்கோட்டை என்பது. 1626-ல் மான்ஹாட்டன் தீவு சுதேசிகளிடமிருந்து விலைக்கு வாங்கப் பெற்றது. ஆங்கிலக் குடியேற்றங்களும் டச்சுக் குடியேற்றங்களும் அடுத்தடுத்திருந்தமையால் அவைகளுக்குள் சண்டை மூண்டது. 1667-ல் ஏற்பட்ட பிரேடா (Breda) உடன்படிக்கைப்படி நியூ ஆம்ஸ்டர்டாம், நியூ ஜர்சி, டெலவேர் ஆகிய மூன்று குடியேற்றங்களும் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமாயின. டச்சுக்காரர்களது நியூ ஆம்ஸ்டர்டாம் நியூயார்க் என்று பெயர் பெற்றது.

1681-ல் வில்லியம் பென் பென்சில்வேனியா குடியேற்றத்தை நிறுவினார். அதற்கு ஒரு கவர்னர் நிய-