பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

121

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

ஜெர்மனியைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கா செய்த உதவிக்குப் பதிலாக 4,626 கோடி ரூபாய் தொகையை 20 ஐரோப்பிய நாடுகள் கொடுக்கவேண்டியதென்றும், 1987 ற்குள் அத்தொகை கொடுபடவேண்டியதென்றும் ஏற்பட்டது. வட்டி கூட்டி, மொத்தத் தொகை 8,876 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது. கிட்டத்தட்ட 1,200 கோடி ரூபாய் வரையில் கொடுபட்டது; அமெரிக்கா தங்கமும் வெள்ளியுமாகச் சேமித்தது. ஐரோப்பிய நாடுகளில் தங்க இருப்புக் குறைந்துபோய், பணவாட்டம் ஏற்பட்டது. பல நாடுகளின் வாணிபம் இம்முறையில் நடந்துவரவே மேற்போக்கான ஒரு சுபிட்சம் நாடெங்கும் காணப் பெற்றது. ஆயினும் திடீரென்று 1929-ல் பண உலகம் தன் உயர் நிலையிலிருந்து கீழிறங்கி விட்டது. ஒரே மாதத்தில் கையிருப்புக் கடன் பத்திரங்கள் நஷ்டமடைந்த தொகை, ஜெர்மனி 60 ஆண்டுகளில் தரவேண்டிய மொத்த யுத்த நஷ்ட ஈட்டுப் பணத்தைப்போல நான்கு மடங்காகும். கடன் பளு ஏறிற்று. நிலைமை சீர்கேடுற்றது. விலைவாசிகள் இறங்கின. பாங்குகள் மூழ்கின, சர்வதேசக் கடன்களைத் திருப்பித் தருவாரில்லை. இங்கிலாந்து தங்கப் பிரமாணத்தினின்றும் நழுவிற்று.

அப்போது அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஹூவர், நிலைமை தானே சீர்திருந்தும் என்று எண்ணிச் சும்மா இருந்துவிட்டார். உற்பத்தி குறையவில்லை ; ஆனால் வாங்குவோரில்லை என்னும் நிலைமை ஏற்பட்டது. 1933 மார்ச்சில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஜனாதிபதியானபோது, அமெரிக்க வரலாற்றிலேயே பெரிய பாங்கு நெருக்கடி தோன்றிற்று ; அந்நாட்டிலிருந்த 18,000 பாங்குகளும் காலவரையறையின்றி மூடப்பட்டன.

புதுமுறை ஏற்பாடு (New Deal) : ரூஸ்வெல்ட் காங்கிரசைப் பிரத்தியேகமாகக் கூட்டிப் பொருளாதார நிபுணர்களுடைய ஆலோசனைகளை ஆராய்ந்தார். பல புதுத் திட்டங்கள் நடைமுறைக்குக் கொணரப்பட்டன. பாங்குச் சட்டம், புனரமைப்புப் பொருளாதார கார்ப்பரேஷன், விவசாயச் சரிக்கட்டு நிருவாகம், வேலைக்கு ஆட் குறைத்தல், வேலையில்லாதோருக்குப் பெரும்பான்மை உதவி, பொது வேலைகளைப் பற்றிய கொள்கை முதலியன பொருளாதார மந்தத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டன. " நியாயமான இலாபத்தை யாரும் எதிர்க்கமாட்டார்கள்; ஆனால் பொதுமக்களில் பெரும்பான்மையோர் பெருந் துயரடைந்திருக்கும்போது, இலாபமா, காருண்யமா என்பதில் ஐயமிருக்க முடியாது" என்று ஜனாதிபதி ரூஸ்வெல்ட் புதுமுறை ஏற்பாட்டை விளக்கினார்.

புதுமுறை ஏற்பாடு தங்கப் பிரமாணத்தை நிராகரித்தது; 60 சென்ட் டாலரைத் தோற்றுவித்தது. ஆயினும் அ. ஐ. நாடுகளுக்கு 33,200 இலட்சம் டாலர் பெறுமான தங்கம் சொந்தமாயிருந்தது. வேண்டுமென்றே டாலரின் மதிப்பைக் குறைத்ததால் மற்ற நாட்டுச் செலாவணிகளும் போட்டிக்காக மதிப்பைக் குறைக்கத் தொடங்கின. சர்வதேச வாணிபம் இதனால் பாதகம் அடைந்தது. புதுமுறை ஏற்பாட்டின் உள் நாட்டுக் கொள்கை ஓரளவு வெற்றிகண்டது. வேலையில்லா நிலைமை ஓராண்டிற்குள் சீர் திருந்தி, 35 இலட்சம் பேர் வேலை பெற்றனர். பொதுமக்களுடைய பணத்தின் கொள்முதல் சக்தி மிகுந்தது. புரட்சிகளையும் இரத்தஞ்சிந்து தலையும் தவிர்ப்பதற்காகப் அரசு கொள்கையொன்று புதிதாகத் தோன்றிற்று.

புது முறை ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு : 1934 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதுமுறை ஏற்பாடு ஒருவிதமான பொதுநல மேற்போக்கான வெற்றியடைந்தது. வியாபாரத்தில் இலாபம் தோன்ற ஆரம்பித்தது; பாங்குத் தொழில் திருத்தியமைக்கப்பட்டது. புதுமுறை ஏற்பாடு போட்டியைக் குறைத்தது ; உற்பத்தியையும் குறைத்தது ; விலைவாசிகளை ஏற்றிவிட்டது. சுங்கவரி உயர்த்தப்படவில்லை யாயினும், டாலரின் செலாவணி மதிப்புக் குறைக்கப்பட்டதால், சுங்கவரி 60% ஏறி நின்றது. இவற்றிற்கெல்லாம் உதவியாகப் பொதுச் செலவுகள் ஏராளமாக மேற்கொள்ளப்பட்டன. தன் நிருவாகத்தின் முதல் 4 ஆண்டுகளில் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ரூ. 6,000 கோடி வரையில் நிவாரண வேலைக்காகவும் பொது நலச் செயல்களுக்காகவும் செலவிட்டார். வியாபாரத்தை ஊக்கும் நோக்கத்தோடு இச்செலவை அவர் மேற்கொண்டாராயினும், அவர் எண்ணம் முழுவதும் ஈடேறியதாகச் சொல்ல முடியாது. சிலர் புதுமுறை ஏற்பாட்டை இடசாரி ஏற்பாடு என்றனர் ; தொழிற் சங்கங்களை நிறுவித் தொழிலாளர்களின் கூலியை உயர்த்த அவர் முயன்றது முதலாளிகளின் பகையை யுண்டாக்கிற்று. பெரிய பற்றாக்குறை வரவு செலவுத் திட்டங்களைப் பண்டைய பொருளாதாரக் கருத்துக்களையே பற்றியிருந்தவர்கள் விரும்பவில்லை. புதுமுறை ஏற்பாட்டின்படி செலவிடப்பட்ட பெருந்தொகைகள், பெரிய வியாபாரங்களை இயக்குவோரிடம் சென்று, அவர்களிடமிருந்து திரும்பவும் தேசியக் கடனாக அரசாங்கத்திற்கே வந்து சேர்ந்தன. டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்திற்கு அவர் செலவிட்டது, கனக் கைத்தொழில்களுக்கும் நுகர்வோருக்கும் நன்மை பயந்ததாயினும், தனி முதலாளிகளின் நலன்களைப் பாதித்ததாகக் குறை கூறப்பட்டது. ஆயினும் புதுமுறை ஏற்பாட்டின் துணிகரமான முயற்சிகள் பொருளாதார வாழ்க்கையைப் பெரிதும் மாற்றிவிட்டன. அவ்வேற்பாடு முடிவுற்ற பின்னும், அதன் ஆதிக்கம் பல பொருளாதாரத் துறைகளிலும் காணப்பெற்றது. ஜனநாயக ஆட்சிகளில்கூடப் பொருளாதாரத் திட்டம் வகுத்தல் அதிகமாகக் கையாளப்பட்டது. சோஷலிசப் புரட்சியின்றியே பொதுநல ஆட்சிக்கு வழிகோலப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தமும் அதன் பிறகும் : உலகமுழுவதும் ஈடுபட்டிருந்த தளவாட உற்பத்திப் போட்டியும், இரண்டாம் உலக யுத்தமும் அமெரிக்காவிற்கு மற்றொரு வாய்ப்பை அளித்தன. சமீப கால நிகழ்ச்சிகளில் பல ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் வறுமையெய்தின ; அந்நாடுகளின் கைத்தொழில்கள் சிதைந்தன ; கப்பல்கள் பல அழிந்துவிட்டன. போரின் இறுதியில் அமெரிக்கா உலகிற்கே கடன் கொடுத்த நாடாகவும், பெரிய உற்பத்தி நிலையமாகவும் விளங்கிற்று. 1947-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலகின் பிற பகுதிகளுக்கு ரூ. 10,000 கோடி அளவிற்குச் சரக்குகளும் சேவைகளும் அளித்துள்ளன; மற்ற நாடுகள் எல்லாம் சேர்ந்து அ. ஐ. நாடுகளுக்கு இவற்றிற்குப் பிரதியாக ரூ. 4,500 கோடி பெறுமானமுள்ள ஏற்றுமதிமட்டும் செய்யக்கூடிய நிலையிலே யிருந்தன. ஆகையால் மற்ற நாடுகள் ரூ. 5.500 கோடி டாலர் மதிப்பு எவ்வாறேனும் பெற்று, வர்த்தகச் சமநிலை எய்தவேண்டியிருந்தது ; போர்க்காலத்தில் இரவல் குத்தகை முறையை அமெரிக்கா ஆரம்பித்து வைத்தது.

போர் முடிவுற்றதும் இரவல் குத்தகையும் முடிவுறவே, டாலர் பற்றாக்குறையை உலகம் சமாளிக்க வேண்டியதாயிற்று. இப் பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா பிரிட்டனுக்கு ரூ. 1.500

கோடி கடன் கொடுத்தது. 1948-ல் நிலைமையின் கடுமையை உணர்ந்த அமெரிக்க வெளிநாட்டுக் காரிய-

16