பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

125

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

றைக் கூட்டாட்சியோடு இணைத்து, நாட்டு மக்களிடையே ஐக்கிய உணர்ச்சியையும் தேசியத்தையும் வளர்த்துள்ளது. அமெரிக்க மக்கள் உச்சநீதி மன்றத்திற்குப் பெருமதிப்பு அளிக்கின்றார்கள்.

இராச்சியங்களின் அரசியல் அமைப்பு : 1789-ல் கூட்டாட்சியை ஏற்படுத்திய உறுப்பு இராச்சியங்கள் 13. இன்று அமெரிக்கக் கூட்டாட்சியில் உறுப்பாக உள்ள இராச்சியங்கள் 48. புதிய இராச்சியங்கள் 35-ம் கூட்டாட்சியால் தோற்றுவிக்கப் பட்டவை.

இராச்சியங்களின் அரசியல் முறை. கூட்டாட்சி அமைப்பிற்கு முரணாக இருக்கக் கூடாது. குடியரசு முறையைப் பின்பற்றி இருக்கவேண்டும். இவ்விரண்டு நிபந்தனைகளுக் குட்பட்டுத் தங்கள் அரசியல் சட்டங் களை உறுப்பு இராச்சியங்கள் எவ்விதமாகவேனும் அமைத்துக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் உரிமை பெற்றிருக்கின்றன.

தங்களுடைய அரசியல் சட்டங்களை வகுக்கவும், மாற்றி அமைக்கவும் இராச்சியங்கள் மூன்று முறைகளைக் கையாளுகின்றன. சிலவற்றில் சட்டசபைகளே அரசியல் சட்டத்தையும் திருத்தும் உரிமை பெற்றிருக்கின்றன. சட்டசபைகள் பிரேரணை செய்யும் திருத்தங்களை ஒரு குடியொப்பத்தின் மூலம் வாக்காளர்கள் ஏற்றுக்கொண்ட பின்னர் அவை அமலுக்கு வரும். பெரும்பாலான இராச்சியங்களில் அரசியல் சட்டத்தைச் செய்யவும் மாற்றவும் அரசியல் நிருணய சபைக் கூட்டங்கள் (Constitutional Conventions) தனியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரு சில இராச்சியங்களில் அரசியல் சட்டத்தில் மாறுதல்களைப் பிரேரேபிக்கும் உரிமையை வாக்காளர்கள் பெற்றுள்ளார்கள். திருத்தப் பிரேரணைகளைத் தயார் செய்து வாக்காளர்கள் இராச்சியச் சட்டசபைக்கு மனுச் செய்து கொள்கிறார்கள். இத்தகைய மனுக்களில் 5,000 முதல் 10,000 வரை வாக்காளர்கள் கையொப்பமிட வேண்டும் என்று நிபந்தனை செய்துள்ளார்கள். இத்திருத்தப் பிரேரணைகளை வாக்காளர்கள் ஒரு குடியொப்பத்தில் (Referendum) ஏற்றால் பிறகு அவை அமலுக்கு வரும்.

இராச்சிய அரசியல் சட்டங்கள் பொதுவாக நீண்டவை. அரசாங்க அமைப்பைத் தவிர, வேறு பல விஷயங்களைப் பற்றிய விவரமான விதிகளையும் நிபந்தனைகளையும் அவற்றுள் சேர்த்திருக்கிறார்கள். இதனால் அரசியல் சட்டத்திற்கும் சாதாரணச் சட்டங்களுக்கும் வேறுபாடு தெரிவது கடினம். அரசியல் சட்டங்களை அடிக்கடி மாற்றவேண்டிய அவசியமும் ஏற்படுகின்றது. இராச்சிய சர்க்கார்கள் கூட்டாட்சி சர்க்காரைப் பின்பற்றியுள்ளன. நிருவாகப் பகுதியும், சட்டசபையும், நீதிமன்றமும் முற்றிலும் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றை ஒன்று கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும் என்பது இதன் நோக்கம்.

இராச்சிய அரசாங்க நிருவாகத் தலைவர் ஒரு கவர்னர். . சில இராச்சியங்களில் அவருக்கு உதவியாக ஓர் உப கவர்னரும் உண்டு. இவர்களையும் வேறு சில முக்கியமான இராச்சிய உத்தியோகஸ்தர்களையும் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். 27 இராச்சியங்களில் நான்கு ஆண்டுகளும், மிகுந்த 21 இராச்சியங்களில் இரண்டு ஆண்டுகளும் கவர்னர்கள் பதவி வகிக்கிறார்கள். கூட்டாட்சியில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் யாவையும் இராச்சிய சர்க்கார்களில் கவர்னர்களுக்கு உண்டு.

நெப்ராஸ்கா என்னும் ஓர் இராச்சியத்தில் தவிர, மற்றெல்லா இராச்சியங்களிலும் சட்டசபைகள் இரண்டு சபைகளையுடையன. மேல் சபைகள் 17 முதல் 56 உறுப்பினரையும், கீழ்ச் சபைகள் 150 முதல் 400 உறுப்பினரையும் கொண்டுள்ளன. சட்டசபைகளின் உறுப்பினர்கள் எல்லோரையும் மக்கள் நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். வாக்குரிமை 21 வயது வந்த அமெரிக்க மக்கள் எல்லோருக்கும் உண்டு. கல்வி, ஆள்வரி, பதிவு, தலக்குடிமை ஆகிய பலவிதமான தகுதிகளை வைத்துத் தெற்கு இராச்சியங்களில் நீக்ரோ சாதியினருக்கு வாக்குரிமை இல்லாமல் செய்துள்ளனர்.

கீழ்ச் சபைகளின் காலம் பெரும்பாலான இராச்சியங்களில் நான்கு ஆண்டுகள்; மிகுந்தவற்றில் இரண்டு ஆண்டுகள். மேல் சபைகள் நிரந்தரமானவை. சாதாரணமாக மூன்றில் ஒரு பங்கு அங்கத்தினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரு சபைகளுக்கும் நிதி விஷயங்கள் தவிர, மற்ற எல்லாவற்றிலும் கீழ்ச்சபைகளோடு சமமான அதிகாரம் உண்டு.

சட்டசபைகளின் உள் அமைப்பும் நடைமுறையும் காங்கிரசைப் பின்பற்றியவை. மேல் சபைகளில் உப கவர்னரும், கீழ்ச் சபைகளில் அவற்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் தலைமை வகிக்கிறார்கள். மசோதாக்களைப் பரிசீலனை செய்ய, இரு சபைகளிலும் பல கமிட்டிகள் உண்டு. ஒவ்வொரு மசோதாவையும் ஒவ்வொரு சபையும் மும்முறை ஆலோசனை செய்யும். இரு சபைகளும் நிறைவேற்றிய மசோதாக்கள் கவர்னர் அங்கீகாரம் பெற்றபின் சட்டங்களாகும். சட்டசபைத் தலைவர்களும், பெரும்பான்மைக் கட்சியின் தலைவர்களும் சட்டசபையின் வேலையை நிருணயிக்கிறார்கள்.

நிருவாகத் தலைவருக்கும் சட்டசபைக்கும் உள்ள தொடர்பு கூட்டாட்சியில் ஜனாதிபதிக்கும் காங்கிரசுக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. இராச்சியச் சட்ட சபைகளுக்குக் கவர்னர்கள் ஆண்டறிக்கை யொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அப்போதைக்கப் போது இராச்சியச் சட்டசபையில் வந்திருந்து சொற் பொழிவு நிகழ்த்தலாம்; நிருபம் அனுப்பலாம் ; சட்டசபையை விசேஷமாகக் கூடும்படி கேட்கலாம். சட்ட சபை நிறைவேற்றிய மசோதாக்களில் திருத்தங்கள் செய்யும்படி கேட்கலாம்; வரவு செலவுத் திட்டங்களில் தனி விவரங்களை (Items) நிராகரிக்கலாம். சட்டங்களுக்குத் தம் அங்கீகாரத்தை முற்றிலும் மறுக்கலாம். இவ்வாறு பல வழிகளில் சட்டமியற்றும் வேலையில் கவர்னர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இராச்சிய நீதி மன்றங்கள் : இவை மூன்று படிகளில் அமைந்துள்ளன ; தலைமையில் இராச்சிய அப்பீல் நீதி மன்றமும், இடையில் ஜில்லா நீதி மன்றங்களும் உள்ளன. அடிப்படையில் நகரங்களில் நகராண்மை நியாய மன்றங்களும், சிவில் நியாய மன்றங்களும் போலீஸ் நியாய மன்றங்களும் உள்ளன. நாட்டுப்புறத்தில் கவுன்டி நியாய மன்றங்களும், கௌரவ நீதிபதிகளும் (Justices of the peace) உண்டு. உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளைக் கவர்னர்கள் மேல் சபைகளின் அங்கீகாரம் பெற்று நியமிக்கிறார்கள். ஆறு அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் இவர்கள் பதவி வகிக்கிறார்கள். மற்ற நியாய மன்றங்களில் நீதிபதிகள் ஓரிரண்டு ஆண்டுகள் மட்டும் பதவி வகிக்கிறார்கள். பெரும்பாலான இராச்சியங்களில் மக்கள் நேரில் இவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இராச்சிய நீதி மன்றங்கள், இராச்சியச் சட்டசபைகள்

செய்யும் சட்டங்களையும், இராச்சிய அரசியல் சட்டங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களையும் விசாரணை செய்கின்றன. கூட்டாட்சிச் சட்டங்களும், அரசியல் அமைப்பும் தொடர்புற்ற விவகாரங்களில் இராச்சிய உயர்நீதி மன்றங்களின் தீர்ப்புக்களைக் கூட்டாட்சி உச்சநீதி மன்றத்திற்கு அப்பீல் செய்துகொள்ளலாம்.